உடனடியாக கொரோனா கட்டுப்பாடுகளை அமுல்படுத்துங்கள்... பிரித்தானிய அரசுக்கு மருத்துவர்கள் அவசர அழைப்பு
பிரித்தானிய அரசு உடனடியாக மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அமுல்படுத்தவேண்டும் என மருத்துவர்கள் அவசர அழைப்பு விடுத்துள்ளனர்.
குளிர்காலத்தில் மீண்டும் கொரோனா பரவி மருத்துவமனைகளை அழுத்தத்திற்குள்ளாக்கும் ஒரு நிலைமையைத் தவிர்ப்பதற்காக, பிரித்தானியா உடனடியாக மாஸ்க் அணிதல் கட்டாயம், வீட்டிலிருந்து வேலை முதலான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தவேண்டும் என பிரித்தானிய மத்துவ அமைப்பான என் ஹெச் எஸ்சின் தலைமை நிர்வாகியான Dr. Matthew Taylor அழைப்பு விடுத்துள்ளார்.
வரலாற்றிலேயே மிக சவாலான ஒரு குளிர்காலத்தை எதிர்கொள்வதற்காக என் ஹெச் எஸ் தயாராகி வருவதாகத் தெரிவித்த Taylor, பூஸ்டர் தடுப்பூசிகள் அளிப்பது மிகத் தாமதமாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த வாரத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றுக்காளாகுவோரின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் இருந்ததால், மீண்டும் சிக்கலான ஒரு நிலைமை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது அக்டோபர் மாதம், அடுத்த மூன்று மாதங்களில் சிக்கலான ஒரு நிலைமை ஏற்படாமல் இருக்கவேண்டுமானால் பெரிய அளவில் அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்கிறார் அவர். ஆகவே, அரசு முன் கூறியிருந்த மாற்று ஏற்பாடுகள் மட்டும் போதாது.
மாஸ்க் அணிதல், வீட்டிலிருந்தவண்ணம் வேலை ஆகியவை மட்டுமின்றி, முதல் இரண்டு கொரோனா அலைகளின்போது செய்தது போல, மக்கள் கூடுதல் முயற்சி எடுத்து மருத்துவ அமைப்புக்கு தங்களாலான அளவு ஆதரவை அளிக்க முயற்சி செய்யவேண்டும் என்கிறார் Taylor.
மார்ச்சில் கொரோனா துவங்கியதிலிருந்து, பிரித்தானியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதுடன், கடந்த மூன்று மாதங்களாக புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கையும் உச்சம் தொட்டுள்ள நிலையில் Dr. Matthew Taylorஇன் கடுமையான எச்சரிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.