மனித உரிமைகள் என்ற போர்வையில் பல நாடுகளில் அட்டூழியங்கள்! அமெரிக்காவின் நிஜ முகத்தை வெளிப்படுத்திய வட கொரியா
உலகளவில் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடு அமெரிக்கா என வட கொரிய அரசு ஊடகமான KCNA முத்திரை குத்தியுள்ளது.
திங்கட்கிழமை KCNA வெளியிட்ட கட்டுரையில் இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த கட்டுரையை சர்வதேச விவகார ஆராய்ச்சியாளர் ஒருவர் எழுதியுள்ளார்.
உலகளவில் ஆதிக்கம் செலுத்துவதற்காக சூழ்ச்சி மற்றும் அதிகார பசி கொண்டது அமெரிக்கா என KCNA கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவால் முன்னிலைப்படுத்தப்பட்ட மனித உரிமைகள், உலகளவில் ஆதிக்கம் செலுத்துவதற்கான அதன் மோசமான லட்சியத்தை எளிதில் அடைய ஒரு தந்திரமே தவிர வேறொன்றுமில்லை.
மனித உரிமைகள் என்ற போர்வையில் இறையாண்மை கொண்ட நாடுகளின் இயல்பான மற்றும் அமைதியான வளர்ச்சியை கடுமையாக பாதிக்க செய்யும் உலகின் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடு அமெரிக்கா.
ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் சுதந்திர நாடுகளின் மீது அரசியல் அழுத்தம் கொடுப்பதற்காக அமெரிக்கா மனித உரிமை பிரச்சினைகளை தவறாகப் பயன்படுத்துவதில் ஆச்சரியமில்லை.
இப்போது பல நாடுகள் தங்கள் வளர்ச்சியைத் தடுப்பதற்காக அமெரிக்க மனித உரிமை நாடகத்திற்கு எதிராக உறுதியாக நிற்கின்றன என KCNA தெரிவித்துள்ளது.