இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் போட்டி : ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்த அறிவிப்பு
இந்தியா-வெஸ்ட் இண்டிஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன்படி ஒருநாள் தொடர் வரும் 6 ஆம் தேதியும், டி20 தொடர் பிப்ரவரி 16 ஆம் தேதியும் தொடங்குகிறது. ஒருநாள் தொடர் ஆமதாபாத்திலும், டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளது.
முன்னதாக கொல்கத்தாவில் நடைபெறும் மூன்று டி20 ஆட்டங்களுக்கும் 75% ரசிகர்களை அனுமதிக்க மேற்கு வங்காள அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 50,000 ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் கொரோனா பரவல் காரணமாக ஆமதாபாத்தில் நடைபெற உள்ள 3 ஒருநாள் போட்டிகளிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இந்த போட்டி இந்திய அணியின் 1000வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை நிகழ்த்தும் உலகின் முதல் கிரிக்கெட் அணி என்ற பெருமையை இந்திய அணி பெறும் நேரத்தில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.