சுவிட்சர்லாந்து பெரும் விலை கொடுக்க நேரிடும்: புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது குறித்து எச்சரிக்கை
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முயன்றால் சுவிட்சர்லாந்து பெரும் விலை கொடுக்க நேரிடும் என சமீபத்திய ஆய்வொன்று எச்சரித்துள்ளது.
புலம்பெயர்தலுக்கு எதிரான பிரேரணை
புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி என்னும் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) என்னுமொரு பிரேரணையை முன்வைத்துள்ளது.

அதாவது, புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன்மூலம், சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவேண்டும் என அக்கட்சி கோரி வருகிறது.
புலம்பெயர்ந்தோரால் வீடுகள் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் சுவிஸ் மக்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை ஏற்படுவதாகக் கூறி இந்த பிரேரணையை சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ளது.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது குறித்து எச்சரிக்கை
இதற்கிடையில், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்கு எதிராக, பல தரப்பினரும் எச்சரிக்கை விடுத்துவருகின்றனர்.
ஏற்கனவே, சுவிஸ் நாடாளுமன்றம், சுவிஸ் மக்கள் அந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டாம் என மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முயன்றால் சுவிட்சர்லாந்து பெரும் விலை கொடுக்க நேரிடும் என சமீபத்திய ஆய்வொன்று எச்சரித்துள்ளது.
ஜெனீவா பல்கலை மற்றும் Geneva School of Business Administration ஆகிய அமைப்புகள் இணைந்து சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள பிரேரணை தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொண்டன.
ஆய்வின் முடிவுகள், புலம்பெயர்தல் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதால், வயதாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்தல், பிறப்பு வீதம் குறைதல் ஆகிய காரணங்களும் இணைந்து பணியாளர்கள் பற்றாக்குறையும் சுவிட்சர்லாந்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கின்றன.
குறிப்பாக, மருத்துவத்துறை, கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் துறை ஆகியவை இதனால் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என்றும் அந்த ஆய்வின் முடிவுகள் எச்சரிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |