ஹெய்தி நாட்டில் கடத்திச் செல்லப்பட்டவர்களில் மூன்று பேர் விடுவிப்பு: மற்றவர்கள் கதி என்ன?
ஹெய்தி நாட்டில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று அமெரிக்க மிஷனெரிகள், கனேடியர் ஒருவர் மற்றும் அவர்களுடைய குடும்பங்கள் என மொத்தம் 17 பேரை, கடந்த அக்டோபர் மாதம் கடத்திச் சென்றது.
அவர்களில் இரண்டு பேர் நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் மூன்று பேர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆதரவற்றோர் இல்லம் ஒன்றிலிருந்து மிஷனெரிகள் சிலரை விமான நிலையத்திற்கு அனுப்புவதற்காக பேருந்து ஒன்றில் இந்த மிஷனெரிகள் சென்ற நிலையில், அவர்கள் சென்ற பேருந்து, தலைநகர் Port-au-Princeஇல் அமைந்துள்ள, Ganthier என்ற இடத்தில் வைத்து கடத்தப்பட்டது.
அவர்களை கடத்திச் சென்றது, 400 Mawozo gang என்று அழைக்கப்படும் கும்பல் ஆகும். அந்த கும்பல், இப்படி மக்களை கடத்திவைத்துக்கொண்டு பிணைத்தொகை கேட்பதை வழக்கமாக வைத்துள்ள ஒரு கும்பல் ஆகும்.
தற்போது கடத்தப்பட்டவர்களை விடுவிக்க, ஒரு நபருக்கு ஒரு மில்லியன் டொலர்கள் வேண்டும் என அந்த கும்பல் கேட்டிருக்கிறது.
அந்த கும்பலின் தலைவனான Wilson Joseph என்பவன், கொலை, கொலை முயற்சி, கடத்தல் வாகன திருட்டு முதலான பல குற்றங்களுக்காக தேடப்படும் ஒரு நபர் ஆவான்.
தற்போது, கடத்தப்பட்டவர்களில் மூவர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுவிக்கப்பட்டவர்கள் யார்? அவர்களை விடுவிக்க பிணைத்தொகை ஏதாவது செலுத்தப்பட்டதா, மற்றவர்கள் கதி என்ன என்ற எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.