கிம்மின் மகளும் சகோதரியும்... மிகக் கொடூரமான போரை எதிர்கொள்ளவிருக்கும் வட கொரியா
கிம் ஜோங் உன் தவறினால், அவரது சகோதரிக்கும் மகலுக்கும் இடையே மிகக் கொடூரமான வாரிசுரிமைப் போரை வட கொரியா எதிர்கொள்ள நேரிடும் என முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
எதிர்காலத் தலைவராக
தாத்தா மற்றும் தந்தைக்குப் பிறகு வட கொரியாவை ஆளும் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர் கிம் ஜோங் உன். இந்த நிலையில், சமீபத்திய நிகழ்வுகள் அனைத்தும், கிம் ஜோங் உன் தனது 13 வயது மகள் கிம் ஜூ-ஏ-விடம் அதிகாரத்தை ஒப்படைக்க விரும்புவது அதிகரித்து வருவதாகவே காட்டுகிறது.

இதனிடையே, தென் கொரியாவின் உளவு முகமையும், அந்நாட்டு நாடாளுமன்றத்தில், குடும்ப வம்சத்தை நான்காவது தலைமுறைக்கு விரிவுபடுத்தும் முயற்சியில் கிம் ஜோங் உன் ஈடுபட்டுள்ளதால், கிம் ஜூ-ஏ நாட்டின் எதிர்காலத் தலைவராக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ஆனால் அந்தத் திட்டங்களை கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் முறியடிக்கக்கூடும் என்றும், கிம் இறந்தாலோ அல்லது ஆட்சி செய்ய முடியாமல் போனாலோ தனக்கென கட்டுப்பாட்டைக் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
38 வயதான யோ ஜோங் அரசியல் மற்றும் இராணுவ மட்டங்களில் நன்கு மதிக்கப்படுபவர். மேலும் ஜோங்-உன்னுக்குப் பிறகு வட கொரியாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக பரவலாக அறியப்படுகிறார்.
தென் கொரியாவின் முன்னாள் இங்கிலாந்து தூதரும், சியோல் உளவுத்துறையின் துணை இயக்குநருமான ரா ஜோங்-யில் கூறுகையில், ஜாங்-உன் மறைவிகு பிறகு அதிகாரத்திற்கான போர் வெடிக்கும் சாத்தியமிருப்பதை தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

கிம் யோ ஜோங் உயர்மட்டத் தலைவராகும் வாய்ப்பு இருப்பதாக நம்பினால், அவர் அதை சொந்தமாக்க தீவிரமாக செயல்படுவார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கருணை காட்ட வாய்ப்பில்லை
அவரைப் பொறுத்தவரை, அவருடைய சொந்த அரசியல் ஆதாயத்தை சொந்தமாக்காமல் தவிர்ப்பதற்கு எந்த காரணங்களும் இல்லை என தாம் கருதுவதாகவும் ரா ஜோங் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்து நாட்டை யார் ஆள வேண்டும் என்பதில் அத்தையும் மருமகளும் மோதிக்கொண்டால், அதில் அதிக கருணை காட்டப்பட வாய்ப்பில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2011ல் கிம் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மாமாவும் வழிகாட்டியுமான ஜாங் சாங்-தேக்கை கட்சிக்கு எதிராக செயல்பட்டது, எதிர் புரட்சிகர பிரிவு செயல்களைச்' செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைது செய்தார்.
2013ல் அவருக்கு துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கிம்மின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங்-நாம் 2017ல் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து ரசாயனத் தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார்.
மகளுக்கு முக்கியத்துவம்
இந்த நிலையில், வட கொரியத் தலைவராக கிம் ஜூ-ஏ தெரிவு செய்யப்பட முடியுமா என்பதில் தென் கொரிய அதிகாரிகள் ஆரம்பத்தில் சந்தேகம் தெரிவித்தனர், நாட்டின் ஆழ்ந்த பழமைவாத கலாச்சாரம் மற்றும் ஆண் ஆதிக்க தலைமையின் பாரம்பரியத்தை மேற்கோள் காட்டியிருந்தனர்.
ஆனால், கிம் ஜோங் உன் சமீப மாதங்களில், தமது மகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் தென் கொரியாவை தீவிரமாக சிந்திக்க வைத்துள்ளது. இருப்பினும், 1948 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து, வட கொரியா கிம் குடும்பத்தைச் சேர்ந்த ஆண் உறுப்பினர்களால் ஆளப்பட்டு வருகிறது.

2010 ஆம் ஆண்டு நடந்த கட்சி மாநாட்டில் கிம் அதிகாரப்பூர்வமாக நாட்டின் வாரிசாக அறிவிக்கப்பட்டபோது அவருக்கு வயது 26 தான்.
மேலும், ஜூ-ஏ அல்லது அவரது உடன்பிறப்புகள் இன்னும் ஆட்சி அதிகாரத்திற்கான உரிய வயதை எட்டாத நிலையில், அடுத்த ஐந்து முதல் 15 ஆண்டுகளுக்கு வாரிசுரிமைக்கு யதார்த்தமாக பரிசீலிக்கப்பட முடியாதவர்களாகவும் உள்ளனர் என்றே ரகசிய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |