வடகொரியாவில் தடையை மீறிய 10 பேருக்கு மரண தண்டனை விதித்த கிம் ஜாங் உன்! பிடிபட்ட 150 பேர்
வடகொரியாவில் நாட்டின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உலகில் தவறு என்று செய்தால், அதற்கு கொடுமையான தண்டனை கொடுக்கும் நாடுகளின் பட்டியலில் வடகொரியாவும் உள்ளது. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தனக்கு எதிராக செயல்பட்டாலோ அல்லது நாட்டின் நடைமுறைகளை பின்பற்றாமல் தவறினாலோ மரண தண்டனை கொடுக்க சற்றும் தயங்கமாட்டார்.
அந்த வகையில், தற்போது வடகொரியாவில் 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள செய்தியில், வெளி உலகத்தை அழைக்க ரகசியமாக தொலைபேசிகளைப் பயன்படுத்திய 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, அவர்கள் தென் கொரியாவில் இருக்கும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதற்காகவும், பண பரிவர்த்தனைக்காகவும், தடை செய்யப்பட்ட சீனா மொபைல் போன் நெட்வொர்க்குகளை பயன்படுத்தியதால், இந்த கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடகொரியாவில், சீனாவின் மொபைல் நெட்வொர்க்குகள் பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது. அதன் படி கடந்த மார்ச் மாதத்தில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட இரகசிய கண்காணிப்பு மூலம், 150 பேர் இது போன்று சிக்கியுள்ளனர்.
தொலைபேசி சிக்னல்களைக் கண்டறிதல், வயர்டேப்பிங் சாதனங்கள் மற்றும் சட்டவிரோத மொபைல் போன் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்வதற்கு, கிம் ஜான் உன் மாநில பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன் நடவடிக்கையாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பலருக்கு தண்டனை கொடுக்கப்பட்டிருந்தாலும், 10 பேருக்கு மரண தண்டனை(தூக்கு தண்டனை) விதிக்கப்பட்டுள்ளது.