வடகொரியாவில் வாழைப்பழம் கிலோ ரூ.3,300: கடுமையான பஞ்சத்தால் பரிதவிக்கும் மக்கள்
கடும் நிதி நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறையால் ஸ்தம்பிக்கும் நிலையை எட்டியுள்ளது விவாதங்களுக்கு பெயர் போன வட கொரிய நாடு.
வட கொரியா கடுமையான பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதாக நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன் முதன் முறையாக வெளிப்படையாக பேசியுள்ளது, அந்த நாடு மிக மோசமான சூழலில் இருப்பதையே காட்டுகிறது.
கடந்த ஆண்டு சூறாவளியால் ஏற்பட்ட சேதத்தால் வேளாண் துறை அதன் தானிய உற்பத்தித் திட்டத்தை நிறைவேற்றத் தவறியது என வெளிப்படையாகவே கிம் ஜோங் கூறியுள்ளார்.
மட்டுமின்றி, உலக நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடை, கொரோனா பெருந்தொற்றால் அண்டை நாடுகளில் இருந்து உதவி பெற முடியாமை உள்ளிட்ட சிக்கல்களாலும் வட கொரியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவில் இருந்து வெளியாகும் தகவலின் அடிப்படையில், தலைநகர் Pyongyang-ல் ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 45 டொலர் (ரூ.3,335) எனவும் தேயிலை தூள் ஒரு பாக்கெட் 70 டொலர் எனவும், கொஃபி 100 டொலருக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், உணவு தட்டுப்பாட்டை போக்க கட்சி உறுப்பினர்கள் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும் என கிம் ஜோங் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், வட கொரியா இந்த சிக்கலில் இருந்து உடனடியாக மீள்வது கடினமே என்கின்றனர் நிபுணர்கள்.
மட்டுமின்றி, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, வட கொரியாவில் 8,60,000 டன் உணவு பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
வட கொரியாவை பொறுத்தமட்டில், உணவுக்காகவும் எரிபொருளுக்காகவும் அந்த நாடு அண்டை நாடான சீனாவையே நம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.