மோசமான சூழ்நிலையை சந்திக்கும் ... அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை
வடகொரியா அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஒரு பெரிய தவறை ஜோ பைடன் செய்து இருப்பதாக கூறி அந்த நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் தனது முதல் பேச்சை நிகழ்த்தினார். அப்போது அவர் வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அணுஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் ஈரான் நாடுகள் அமெரிக்காவின் தேச பாதுகாப்புக்கும், உலக பாதுகாப்புக்கும் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று விமர்சித்தார்.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சுக்கு வட கொரியா கடும் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வட கொரியா தரப்பில், சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பாராளுமன்றத்தில் பேசும்போது, வடகொரியா அவர்களது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஒரு பெரிய தவறை செய்து இருக்கிறார்.
விரோத கொள்கையை நிலைநிறுத்துவதற்கான தனது நோக்கத்தை அவர் வெளிப்படுத்தியன் மூலம் அமெரிக்கா மிகவும் மோசமான சூழ்நிலையை எதிர் கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து வடகொரியா வெளியுறவுத்துறை அதிகாரி குவான் ஜாங்கன் கூறும்போது, அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா செய்ததை போல் வடகொரியா மீதான விரோத கொள்கையை தொடர்ந்து செயல்படுத்துவதற்கான ஜோ பைடனின் பேச்சு தெளிவாக பிரதிபலிக்கிறது.
அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஒரு பெரிய தவறை செய்தார் என்பது உறுதியாகி இருக்கிறது. தற்போது வட கொரியா மீதான அமெரிக்காவின் கொள்கையின் முக்கிய குறிப்பு தெளிவாகி விட்டதால் அதற்கான நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
காலப்போக்கில் அமெரிக்கா மிகவும் மோசமான சூழ்நிலையை சந்திக்கும் என்றார்.