இளைஞர்களை குறிவைக்கும் கிம் ஜாங் உன்: புதிய சட்டம் இயற்றியுள்ளதாக தகவல்
அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் திரைப்படங்களை வைத்திருப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வடகொரியா புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வடகொரிய இளைஞர்கள் வெளிநாட்டு மோகத்தால் சீரழிவதாக ஜனாதிபதி கிம் ஜாங் உன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அமெரிக்க, தென்கொரிய நாடுகளின் திரைப்படங்களை வைத்திருந்தால் சிறை தண்டனை உட்படக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் ஜனாதிபதி கிம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் தென்கொரிய ஊடகங்கள் வெளியிட்ட தகவலில், வடகொரிய தலைவர் கிம் சமீபத்தில் அந்நாட்டின் அரசு ஊடகத்துக்குக் கட்டளை ஒன்றை விதித்துள்ளார்.
அதில் இளைஞர்கள் தனித்துச் செயல்படும் பழக்க வழக்கங்களை அழிக்கும் வகையிலான நடவடிக்கைகள் தேவை. மேலும், வெளிநாடுகளின் மொழி வழக்கம், வெளிநாட்டு ஆடை மற்றும் சிகை அலங்காரம் ஆபத்தான விடம் என்றும் கிம் குறிப்பிட்டுள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, கொரோனா தொற்றை காரணமாகப் பயன்படுத்திக் கொண்ட வடகொரியா, மேலும் தம்மை உலக நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தென்கொரியத் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
தீவிர கம்யூனிஸ்ட் நாடான வடகொரியாவில் ஏற்பட்டுள்ள கடுமையானப் பொருளாதார சேதத்தைக் குறைக்கும் முயற்சியில் கிம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
முன்னதாக, உலகம் முழுவதும் கொரோனாவால் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும்போது வடகொரியாவில் மட்டும் கொரோனா தொற்று குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் ஜனாதிபதி கிம், தங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று இல்லை என்று நாட்டு மக்களிடையே உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.