பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஜப்பான்: வட கொரியாவால் பதற்றம்
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசியதாக ஜப்பான் அச்சம்
வடகொரியாவின் அந்த திட்டம் பாதியில் தோல்வி கண்டுள்ளதாக தென் கொரியா
வட கொர்ரியா தொடர்ந்து ஏவுகணைகளை ஏவி வருவதால் ஜப்பான் நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளது. புல்லட் ரயில் சேவைகளை நிறுத்தியுள்ளதுடன், குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பு கருதி வெளியேறவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசியதாக ஜப்பான் அச்சம் தெரிவித்துள்ளது. மேலும், வடகொரியாவின் ஒரு ஏவுகணையானது 460 மைல்கள் தொலைவுக்கு பயணித்துள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Pic: Kyodo
மட்டுமின்றி, அண்டை நாடுகளுக்கு மீதே பயணிப்பதை தவிர்க்க, வடகொரியா திட்டமிட்டு செயல்பட்டதாகவும் ஜப்பான் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தொடர்பில் கண்காணிக்க தவறியதாக ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால் வடகொரியாவின் அந்த திட்டம் பாதியில் தோல்வி கண்டுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. தென் கொரிய அதிகாரிகள் தெரிவிக்கையில், முதல் ஏவுகணை வட கொரிய தலைநகர் பியோங்யாங்கிற்கு அருகில் இருந்து ஏவப்பட்டது, இரண்டாவது மற்றும் மூன்றாவது ஏவுகணை சுமார் ஒரு மணி நேரம் கழித்து பியோங்யாங்கிற்கு வடக்கே உள்ள கேச்சோனில் இருந்து ஏவப்பட்டது என தெரிவித்துள்ளனர்.
முதல் ஏவுகணை ஏவப்பட்டதன் பின்னர், ஜப்பான் பிரதமர் Fumio Kishida பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், கட்டிடத்தின் சுரங்க அமைப்புகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டனர்.
இதனிடையே, மூன்று பிராந்தியங்களில் புல்லட் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. ஆனால் பாதிப்புகள் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை. பிரதமர் Fumio Kishida தெரிவிக்கையில், வட கொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை ஏவுதல் கோபத்தை தூண்டும் செயல் எனவும் முற்றிலும் மன்னிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய நாள் வட கொரியா ஒரே நாளில் 23 ஏவுகணை ஏவி கொரியா தீபகற்பத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதில் ஒரு ஏவுகணையானது தென் கொரியாவின் கடற்பகுதியில் 40 மைல்கள் தொலைவில் விழுந்ததாக தகவல் வெளியானது.
மேலும், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் ராணுவ பயிற்சிகளை உடனடியாக கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வட கொரியா முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.