புதிய தொலைதூர க்ரூஸ் ஏவுகணையை சோதித்த வடகொரியா!
வட கொரியா ஒரு புதிய தொலைதூர க்ரூஸ் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி பரிசோதித்தது.
ஜப்பான் நிலப்பரப்பின் பெரும் பகுதியைத் தாக்கும் திறன் கொண்ட, ஒரு க்ரூஸ் ஏவுகணையை வட கொரியா இன்று (திங்கட்கிழமை) சோதனை செய்திருப்பதாக வடகொரியாவின் செய்தி முகமையான KCNA உறுதிப்படுத்தியுள்ளது.
க்ரூஸ் ஏவுகணைகள் தாழ்வாகப் பறக்கும் தன்மை உடையவை. குறிப்பாக இந்த வகை ஏவுகணைகள் 1,600 கிமீ வரை சென்று தாக்கக்கூடியவை என கூறப்படுகிறது.
ஆனால், இன்றைய பரிசோதனையில் அவை சுமார் 1500 கிமீ தூரம் பயணித்ததாக KCNA தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் ஆய்வாளர் அங்கித் பாண்டாவின் கருத்துப்படி, இது நாட்டின் முதல் நீண்ட தூர பயண ஏவுகணையாகும், இது ஒரு அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடும் என்று கூறியுள்ளார்.
வடகொரியாவில் உணவுப் பஞ்சம் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவும் இந்த சூழ்நிலையிலும், அங்கு ஏவுகணைகள் மேம்படுத்தப்படுத்தும் பணிகள் தொடர்ந்து அதிக பொருட்செலவில் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
வடகொரியா தொடர்ந்து ஆயுதங்களை மேம்படுத்துவதன் மூலம் சர்வதேச சமூகத்துக்கும், அதன் அண்டை நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.
தங்களின் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் தென்கொரியாவை பாதுகாப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. வடகொரியா சோதனை செய்த ஏவுகணை குறித்து, அமெரிக்க உளவு அமைப்புகளோடு இணைந்து ஆய்வு செய்து வருவதாக தென்கொரியாவின் யோன்ஹப் செய்தி முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
வடகொரியா அணு ஆயுதங்கள் பயன்பாட்டை தடை செய்வது தொடர்பாக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இந்த வாரம் சந்தித்து பேச உள்ளதும் குறிப்பிடத்தக்கது.