மனிதக்கழிவுகளை அனுப்பும் வடகொரியா: பதிலடி கொடுக்கப்படும் என தென்கொரியா எச்சரிக்கை
வடகொரியா, ஆயிரக்கணக்கான பலூன்களுடன் மனிதக்கழிவுகளை தென்கொரியாவுக்குள் அனுப்பியுள்ள நிலையில், அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என தென்கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆயிரக்கணக்கான பலூன்களுடன் மனிதக்கழிவுகள்
வடகொரியா, தென்கொரியாவுக்குள் மனிதக்கழிவுகள் மற்றும் குப்பைகள் அடங்கிய 2,000 மூட்டைகளை பலூன்களில் கட்டி அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டுக்குள் இதுவரை சுமார் 700 அத்தகைய பலூன்கள் வந்து இறங்கியுள்ளதாக தென்கொரியா ஒப்புக்கொண்டுள்ளது.
வடகொரியா எதனால் இப்படி செய்கிறது?
வடகொரியா எப்போதுமே தென்கொரியாவுடன் மோதல் போக்கையே கடைப்பிடிக்கும் என்றாலும், சமீபத்தில் வடகொரியா விண்வெளிக்கு அனுப்பிய உளவு செயற்கைக்கோள் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட வெறுப்பைக் காட்டத்தான் அது இப்படி கழிவுகள் அடங்கிய பலூன்களை தென்கொரியாவுக்குள் அனுப்பிவருகிறதாம்.
பதிலடி கொடுக்க திட்டமிட்ட தென்கொரியா
இந்நிலையில், வடகொரியாவுக்கு பதிலடி கொடுப்பதற்காக தென்கொரியா ஒரு விடயத்தை துவக்க இருப்பதாக அறிவிக்க, உடனடியாக, தாங்கள் பலூன்களை அனுப்புவதை நிறுத்தப்போவதாக வடகொரியா தெரிவித்துள்ளதாம்.
அப்படி என்ன பயங்கர நடவடிக்கை எடுக்க தென்கொரியா முடிவு செய்தது தெரியுமா? அதாவது, இரண்டு நாடுகளுக்குமிடையிலான எல்லையில், தென்கொரிய தரப்பில், பிரம்மாண்டமான ஸ்பீக்கர்களை (loudspeakers) தென்கொரியா நிறுவிவைத்துள்ளது. முன்பு அந்த ஸ்பீக்கர்களில் வடகொரியாவுக்கெதிரான பிரச்சாரங்கள் சத்தமாக ஒலிக்கச்செய்யப்படுமாம்.
2018ஆம் ஆண்டு, இரு தரப்புக்குமிடையே செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, தென்கொரியா அந்த ஸ்பீக்கர்களில் வடகொரியாவுக்கெதிரான பிரச்சாரங்கள் சத்தமாக ஒலிக்கச்செய்யப்படுவதை நிறுத்தியுள்ளது.
தற்போது பலூன்களில் கழிவுகள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அந்த ஸ்பீக்கர்களில் வடகொரியாவுக்கெதிரான பிரச்சாரங்கள் சத்தமாக ஒலிக்கச்செய்யப்படும் என தென்கொரியா அறிவிக்கவே, உடனடியாக, தாங்கள் பலூன்களை அனுப்புவதை நிறுத்தப்போவதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
எச்சரிக்கும் அமெரிக்க நிபுணர்
இப்போது பலூன்களை அனுப்புவதை நிறுத்தப்போவதாக வடகொரியா கூறினாலும், வடகொரியாவிடம் தென்கொரியா எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார் அமெரிக்காவின் ட்ராய் பல்கலை சர்வதேச உறவுகள் பேராசிரியரான Dan Pinkston என்பவர்.
இந்த பலூன்களை அனுப்பும் விடயம் முதிர்ச்சியற்ற ஒரு விடயம் என்றாலும், அதனால் வடகொரியாவுக்கு பலன் உள்ளது என்கிறார் அவர். அதாவது, வடகொரியா இப்படி பலூன்களை அனுப்புவதன்மூலம், தென்கொரியாவின் வான் பாதுகாப்பை சோதிக்கிறது என்று கூறும் பேராசிரியர் Dan Pinkston, தென்கொரிய ராணுவத்தால் எவ்வளவு சீக்கிரம் ஒரு அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கமுடியும் என வடகொரியா சோதிக்கிறது, அது ராடாரிலுள்ள ஓட்டைகளை தேடி, அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளப்பார்க்கிறது என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |