"நீங்கள் என் மன்னர் இல்லை" சார்லஸை பொது இடத்தில் சங்கடப்படுத்திய நபர்! வைரலாகும் வீடியோ
பிரித்தானிய குடிமகன் ஒருவர் மன்னர் மூன்றாம் சார்லஸை பொது இடத்தில் சங்கடப்படும்படி சில கேள்விகளை எழுப்பினார்.
பிரித்தானியாவின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில், நாங்கள் உங்கள் முடிசூட்டு விழாவுக்கு வரி செலுத்த வேண்டுமா என்று அவர் கேட்டுள்ளார்.
பிரித்தானியாவின் புதிய மன்னரான சார்லஸ், கார்டிஃபில் மக்கள் கூட்டத்தை நேரில் சந்தித்தபோது, பிரித்தனையார் ஒருவர் 'நீங்கள் என் மன்னர் இல்லை' என்று கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு, அரியணை அவரது வாரிசுக்குக் கொடுக்கப்பட்டது, இதனால் சார்லஸ் தானாகவே மன்னரானார். இருப்பினும், அவரது முடிசூட்டு விழாவை ஏற்பாடு செய்ய வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம்.
வேல்ஸின் முன்னாள் இளவரசரும் இப்போது புதிதாக நியமிக்கப்பட்ட மன்னருமான சார்லஸின் மக்கள் கூட்டத்துடனான உரையாடல் எதிர்பாராத திருப்பத்தை எட்டியது. கோபமடைந்த பிரித்தானியர் ஒருவர் நாட்டில் வரி செலுத்துபவர் தாங்க வேண்டிய நிதிச்சுமை குறித்த கேள்விகளுடன் மன்னரை எதிர்கொண்டார்.
புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் கார்டிஃப் கோட்டைக்கு வெளியே பொதுமக்களை சந்தித்தபொது இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தக் காணொளியில், மன்னர் கூட்டத்தில் இருந்தவர்களுடன் கைகுலுக்கிச் சிரித்துக்கொண்டிருந்தபோது, தாடியுடன் காணப்பட்ட பிரித்தானியர் ஒருவர் சார்லஸை நோக்கி, "எங்கள் வீடுகளை சூடாக்க நாங்கள் போராடும்போது, உங்கள் அணிவகுப்புக்கு நாங்கள் பணம் செலுத்த வேண்டும். வரி செலுத்துவோர் எதற்காக உங்களுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் பணம் செலுத்த வேண்டும்? "நீங்கள் என் மன்னர் இல்லை!" என்று கேள்வி எழுப்பினார்.
மன்னர் சார்லஸ் அந்த நபரை நோக்கி சிறிது நேரம் திரும்புவதைக் காணலாம், ஆனால் விரைவில் ஒரு பாதுகாப்பு அதிகாரி இருவருக்கும் இடையில் நின்றுகொண்டதால், சார்லஸ் விரைவாக அங்கிருந்த நகர்ந்தார். மௌனமாகத் திரும்பியதால், அந்த மனிதனின் குற்றச்சாட்டுக்கும் மோதலுக்கும் மன்னர் பதிலளிக்கவில்லை. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
அரச குடும்பத்திற்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து 'இறையாண்மை மானியம்' (sovereign grant) என்ற பெயரில் கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது, இது பிரித்தானியாவின் கருவூலத்தால் அரச குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.