விசா விவகாரம்... மேல்முறையீடு நிராகரிப்பு! அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்படும் ஜோகோவிச்
விசா மீதான மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்தைத் தொடர்ந்து செர்பியா டென்னிஸ் வீரர் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட உள்ளார்.
2022 அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாட செர்பியா டென்னிஸ் வீரரும், உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச் அவுஸ்திரேலிய வந்தார்.
ஆனால், ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போடாததால், அவருக்கு வழங்கப்பட்ட விசா ரத்து செய்யப்பட்டு தடுப்பு மையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தை நாடிய நோவாக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதி பெற்றார்.
இதனிடையே, அவர் அவுஸ்திரேலிய பயண விவர படிவத்தில் தவறான தகவல் அளித்திருந்தது வெளிச்சத்திற்கு வந்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜோகோவிச்சும் பயண விவர படிவத்தில் தவறான தகவல் அளிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், வெள்ளியன்று அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் ஜோகோவிச்சின் விசாவை மீண்டும் ரத்து செய்தார்.
இதை எதிர்த்து ஜோகோவிச் அவுஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜோகோவிச்சின் விசாவை குடிவரவுத் துறை அமைச்சர் ரத்து செய்ததை உறுதி செய்தது.
ஜோகோவிச்சின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளதால் அவர் விரைவில் அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்படவுள்ளார்.
இதனால், 2022 அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் விளையாட முடியாமல் போயுள்ளது.