நோர்வேவில் வில்-அம்பு தாக்குதல் நடத்தியவர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்? வெளியான முக்கிய தகவல்
நோர்வேவில் வில்-அம்பை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய மர்ம நபர் பற்றிய தகவல்களை வெளியாகியுள்ளன, மேலும் இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய நாடான நோர்வேயில் அடையாளம் தெரியாத மர்ம நபர் வில் மற்றும் அம்புகளைப் பயன்படுத்தி திடீரென்று அப்பகுதி வழியே சென்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தினார்.
இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு தலைநகரான Oslo-வில் இருந்து சுமார் 50 மைல் தொலைவில் உள்ள Kongsberg நகரின் மையப்பகுதியில் மக்கள் கூடியிருந்த இடத்தில் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் 4 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 50 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் என்று பிராந்திய பொலிஸ் தலைவர் ஓலே பிரெட்ரூப் சவேருட் வியாழக்கிழமை காலை செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னதாக, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்துவிட்டதாகவும், இது பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என்றும் பொலிசார் கூறியிருந்தார்.
ஆனால், தற்போது இந்த கொடிய வில்-அம்பு தாக்குதல் பயங்கரவாத செயல் என்று தெரிகிறது என நோர்வேயின் பாதுகாப்பு சேவை (PST) தெரிவித்துள்ளது. எனினும் தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
சந்தேகநபர் எஸ்பென் ஆண்டர்சன் பிராதன் (Espen Andersen Brathen) என பெயரிடப்பட்டுள்ளார். 37 வயதான இவர் டேனிஷ் குடிமகன் என்றும் இஸ்லாமிற்கு மாறியவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் பயங்கரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.