லண்டன் நிலைமை... Omicron மாறுபாடு தொடர்பில் கவலை தெரிவித்த நகர மேயர்
லண்டன் நகரில் அதிகரிக்கும் Omicron கொரோனா மாறுபாடு பரவல் தொடர்பில் தமது கவலையை வெளியிட்டுள்ளார் நகர மேயர் சாதிக் கான்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய லண்டன் மேயர் சாதிக் கான், இதுவரையான கொரோனா மாறுபாடுகளில் Omicron தற்போது அதி வேகமாக பரவும் தன்மை கொண்டதாக உள்ளது என்றார்.
தற்போதைய நிலைமை கவலை கொள்வதாக உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், பொலிஸ் துறை, தீயணைப்பு மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் தட்டுப்பாடு பெரும் சிக்கலை எதிர்கொள்ள வைத்துள்ளது என்றார்.
லண்டன் மக்களில் அதிகமானோருக்கு Omicron தொற்று உறுதி செய்யப்படுவது பெரும் பிரச்சனையாக உருவாகக்கூடும் என்றார் சாதிக் கான். லண்டனில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,534 எனவும் இது கடந்த வாரத்தைவிடவும் 28.6% அதிகரிப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா முழுமையும் கொரோனா பாதிப்பால் 7,611 பேர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். தடுப்பூசி தொடர்பில் விமர்சனம் முன்வைத்துள்ள மேயர் சாதிக் கான், கருப்பினத்தவர்களில் சிலர், இஸ்லாமியர்களில் சிலர், யூதர்களில் சிலர் என லண்டன் மக்கள் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உள்ளனர்.
இவர்களிடம் தடுப்பூசியின் முக்கியத்துவம் தொடர்பில் எடுத்துக்கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ள சாதிக் கான், லண்டன் மக்கள் அனைவரும் குறைந்தது முதல் டோஸ் தடுப்பூசியேனும் போட்டுக்கொள்ளும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
லண்டனில் 15.4 மில்லியன் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் 16 வயதுக்கு மேற்பட்ட 87% மக்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும் 40 வயதுக்கு மேற்பட்ட 94% மக்கள் இரண்டு டோஸ் போட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.