மூச்சுவிட முடியாமல் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட 18 வயது நர்ஸ்: தெரியவந்த பகீர் சம்பவம்
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பயிற்சி செவிலியர் ஒருவர் நுரையீரலில் மூன்று ரத்தக்கட்டிகளுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளார்.
பயிற்சி செவிலியரான 18 வயது Ellie Peacock கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பகுதியில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் மார்ச் 31ம் திகதி அவர் தமது முதல் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார். ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்ட நிலையில், மே 7ம் திகதியில் இருந்து அவருக்கு லேசான தலைவலி மற்றும் மூச்சை இழுக்கும் போது தோள்பட்டை எலும்பு அருகே கடுமையான வலியும் இருந்துள்ளது.
இதன் இரண்டு நாட்களுக்கு பின்னர், மார்பு பகுதியில் எக்ஸ்ரே சோதனை மேற்கொண்டதில் அவருக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது.
மட்டுமின்றி முதுகிலும் விலா பகுதியிலும் அவருக்கு வலி இருப்பதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், வலி நிவாரணிகளுடன் அவர் குடியிருப்புக்கே அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால் மே 11ம் திகதி நள்ளிரவு 2 மணியளவில் அவருக்கு மூச்சுவிட முடியாமல் சிரமப்படவே, உடனே அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில், அவரது வலது நுரையீரலில் மூன்று ரத்தக்கட்டிகள் உருவாகியுள்ளதை மருத்துவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
தற்போது அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், நான்கு நாட்களுக்கு ஒருமுறை ரத்த பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அவுஸ்திரேலியாவை பொருத்தமட்டில், இதுவரை 18 பேர்களுக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னர் ரத்தக்கட்டிகள் உருவானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.