ஐபிஎல்லில் விளையாட அனுமதி வேண்டும்: நீதிமன்றத்தில் இலங்கை வீரர் வழக்கு
2026 ஐபிஎல் தொடரில் விளையாட தடையில்லாச் சான்றிதழ் வழங்குமாறு இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா வழக்கு தொடர்ந்துள்ளார்.
நுவான் துஷாரா
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா (Nuwan Thushara) நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாட உள்ளார்.
ஆனால், அவர் இன்னும் இலங்கை கிரிக்கெட்டிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (NOC) வாங்கவில்லை. இது அவருக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் களமிறங்க தடையாக உள்ளது.
இதன் காரணமாக ஐபிஎல் 2026 தொடரில் பங்கேற்க ஏதுவாக தடையில்லாச் சான்றிதழை வழங்க, இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி நுவான் துஷாரா கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஷம்மி சில்வா, செயலாளர் பந்துல திஸ்ஸநாயக்க, பொருளாளர் சுஜீவ கோடலியத்த மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.
உடற்தகுதித் தரநிலை
மேலும், 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ்களைப் பெற்று இத்தொடரில் தான் ஏற்கனவே பங்கேற்றிருந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட உடற்தகுதித் தரநிலைகளை பூர்த்தி செய்ய தவறியதை காரணம் காட்டி, 2026 ஐபிஎல் தொடரில் விளையாட NOC வழங்க இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
அதேபோல் துஷாரா தனது வாதத்தின்போது, 2026 மார்ச் 31ஆம் திகதியுடன் இலங்கை கிரிக்கெட்டிற்கான தனது ஒப்பந்தம் காலாவதியாக இருந்ததாகவும், ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க விரும்பவில்லை என்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகும் தனது எண்ணத்தை வாரியத்திடம் தெரிவித்திருந்ததாகவும் கூறினார்.
மறுத்தது நியாயமற்றது
அத்துடன் தேசிய அணியில் இடம்பெற மாட்டேன் என்று தனக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும், எனவே உடற்தகுதி அடிப்படையில் தடையில்லாச் சான்றிதழ் வழங்க மறுத்தது நியாயமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.
தடையில்லாச் சான்றிதழ் வழங்கத் தவறினால், தனது அணியால் (பெங்களூரு) தான் மாற்றப்பட நேரிடும் என்றும், கணிசமான வருமானம் மற்றும் எதிர்கால கிரிக்கெட் வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்றும் அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஏப்ரல் 9ஆம் திகதி விசாரணைக்கு நிர்ணயிக்கப்பட்டது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |