அக்காவின் சடலத்தை தோண்டி வங்கிக்கு கொண்டு வந்த நபர் - அதிர்ந்த அதிகாரிகள்
பணத்தை எடுக்க வங்கி அதிகாரிகள் அலைக்கழித்ததால், நபர் ஒருவர் தனது அக்காவின் சடலத்தை தோண்டி வங்கிக்கு கொண்டு வந்துள்ளார்.
அலைக்கழித்த வங்கி
ஒடிசா மாநிலம், கியோன்ஜர் மாவட்டத்தின் மல்லிப்ஷி கிராமத்தில், வசித்து வருபவர் 50 வயதான ஜிது முண்டா. இவரது அக்கா கல்ரா முண்டா 2 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இவரது கணவர் மற்றும் குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டதால், அவரது தம்பி ஜிது முண்டா மட்டுமே ஒரே உறவாக இருந்துள்ளார்.

கல்ரா முண்டா தனது கால்நடைகளை விற்றதன் மூலம் கிடைத்த 19,300 ரூபாயை, ஒடிசா கிராமின் வங்கி கணக்கில் வைத்திருந்தார்.
தனது அக்கா இறந்த பின்னர், வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதற்காக வங்கி கிளையை அணுகியுள்ளார்.
தனது அக்கா இறந்து விட்டார் என கூறிய நிலையில், இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், படிப்பறிவில்லாத ஜிது முண்டாவிற்கு இந்த ஆவணங்களை பெறும் வழிமுறை எதுவும் தெரியவில்லை.
சடலத்துடன் வங்கிக்கு வந்த நபர்
வங்கியில் பணத்தை எடுக்க முடியாமல் விரக்தியடைந்த ஜிது முண்டா, தனது அக்கா புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று அவரது சடலத்தை தோண்டி வங்கிக்கு கொண்டு சென்று வைத்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
வங்கிக்கு வந்த காவல்துறையினர், வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுக்க உதவுவதாக ஜிது முண்டாவிற்கு உறுதியளித்தனர்.
இதனைத்தொடர்ந்து, காவல்துறையினரின் முன்னிலையில் அவரது சடலம் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.
வங்கி ஊழியர்கள் தொடர்ந்து அலைக்கழித்ததால், வேறு வழியின்றி விரக்தியில் இவ்வாறு செய்ததாக ஜிது முண்டா தெரிவித்துள்ளார்.
இது குறித்து விளக்கமளித்துள்ள கியோன்ஜர் மாவட்ட துணை ஆட்சியர் உமா சங்கர் தலாய், "அந்த பழங்குடி இனத்தை சேர்ந்த நபருக்கு விதிமுறைகள் எதுவும் தெரியாது. அவர் விரக்தியில் இவ்வாறு செய்துள்ளார்.
வங்கி அதிகாரிகள் ஆவணங்களை கேட்டது சரிதான். ஆனால் அவருக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது. வங்கியுடன் ஆலோசித்து, சான்றிதழ்கள் பெறுவது, பணம் எடுப்பது குறித்து வழிவகை செய்வோம்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |