ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடவடிக்கைகள் இனி இல்லை... அமெரிக்கா அறிவிப்பு
ஈரானுக்கு எதிரான தங்களது தாக்குதல் நடவடிக்கைகளை அமெரிக்கா நிறைவு செய்துவிட்டது என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இனி தாக்குதல் இல்லை
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறாக எந்தவொரு புதிய தாக்குதலுக்கும் பேரழிவை ஏற்படுத்தும் பதிலடி அளிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே மார்கோ ரூபியோ இனி தாக்குதல் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஹார்முஸ் நீரிணையில் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பாதையிலிருந்து கப்பல்கள் விலகிச் சென்றால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கடற்படை எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இரண்டாவது நாளாக இடைமறித்து வருவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. ஆனால், ஈரானில் இருந்து அப்படியான ஒரு நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என இராணுவம் மறுத்துள்ளது.
வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆறு ஈரானியப் படகுகளைத் தாக்கியதாக அமெரிக்கா கூறிய நிலையில், திங்களன்று ஈரான் அமெரிக்கப் படைகள் மீது ஏவுகணைகளையும் ட்ரோன் தாக்குதலையும் முன்னெடுத்தது.
இதனிடையே, தளபதி டான் கேன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், அமெரிக்க மத்தியக் கட்டளைப்படை, உத்தரவிடப்பட்டால், முக்கியப் போர் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கத் தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பணயக்கைதியாக
எதிரிகள் எவரும் எங்களது தற்போதைய நிதானத்தை உறுதியின்மையாகத் தவறாகக் கருத வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, ஈரான் புதிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க முன்வர வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளதுடன், மேலும் ஈரானியர்களைக் கொல்ல தாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பதன் மூலமும், கடலில் கண்ணிவெடிகளைப் புதைப்பதன் மூலமும் ஈரான் உலகப் பொருளாதாரத்தைப் பணயக்கைதியாக வைத்திருப்பதாக ரூபியோ குற்றம் சாட்டினார்.
மேலும், ஈரான் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் கண்ணிவெடிகளின் இருப்பிடத்தை வெளியிட வேண்டும் என்றும் கோரி, அமெரிக்காவும் வளைகுடா நட்பு நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் ஒன்றை வரைவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |