எண்ணெய் விலை அடுத்த ஆண்டிலும் 100 டொலருக்கு மேல் இருக்கும்... எச்சரிக்கும் Goldman Sachs
ஈரான் போர் எரிபொருள் விநியோகம் குறித்த அச்சங்களை ஆழப்படுத்தியுள்ள நிலையில் வெள்ளிக்கிழமையன்று எண்ணெய் விலைகள் சற்று குறைந்தன.
உயர்ந்தே காணப்படும்
சர்வதேச பெஞ்ச்மார்க் விலை ஒரு பீப்பாய்க்கு 119 டொலருக்கும் மேலாக உயர்ந்த ஒரு கொந்தளிப்பான நாளுக்குப் பிறகு இந்த லேசான சரிவு ஏற்பட்டுள்ளது.

ஆனால், மத்திய கிழக்கில் எரிசக்தி உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாலும், முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாலும், விலைகள் உயர்ந்தே காணப்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், 2027 ஆம் ஆண்டிலும் எண்ணெய் விலைகள் கண்டிப்பாக 100 டொலருக்கு மேல் நீடிக்கும் என்றே Goldman Sachs வங்கி எச்சரித்துள்ளது.
நீண்டகால இடையூறுகள் மற்றும் பெரிய, தொடர்ச்சியான விநியோக இழப்புகள் கொண்ட அபாயகரமான சூழ்நிலைகளில், எண்ணெய் விலைகள் நீண்ட காலத்திற்கு 100 டொலருக்கு மேல் நிலைத்திருக்கக்கூடும் என்றே முதலீட்டு வங்கியின் ஆய்வாளர்கள் வியாழக்கிழமையன்று வெளியிட்ட குறிப்பு ஒன்றில் பதிவு செய்துள்ளனர்.
உலகளாவிய எண்ணெய் அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய், வெள்ளிக்கிழமை அதிகாலையில் 0.6 சதவீதம் சரிந்து 108 டொலராக இருந்தது.
ஈரானின் முக்கிய எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களை மீண்டும் நடத்த வேண்டாம் என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்புக்குத் தனது நாடு செவிசாய்க்கும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதைத் தொடர்ந்து, விலைகள் மிதமாகின.

ஈரானின் South Pars எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு நிலையமான கத்தாரின் 'ராஸ் லஃபான்' (Ras Laffan) மீது ஈரான் பதிலடி கொடுப்பதற்கு காரணமானது, இதனால் எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்தன.
147 டொலரை எட்டும்
இதனிடையே, கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த எரிபொருள் விலையை எதிர்கொண்டுள்ள அமெரிக்கர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், இந்தப் பிரச்சினை வெகு விரைவில் முடிவுக்கு வரும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
மட்டுமின்றி, ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் போரைத் தொடங்குவதற்கு முன்பு, எண்ணெய் விலைகள் இன்னும் மோசமான நிலைக்கு செல்லும் என்று தான் கருதியிருந்ததாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஆனால் மூன்று வாரங்கள் கடந்தும், போர் தணியும் அறிகுறியேதும் தென்படவில்லை என்றே தெரிய வருகிறது. இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை என்றே ஈரானின் மூத்த பாதுகாப்பு வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் இடையூறுகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 147 டொலரை எட்டும் என்றே Goldman Sachs வங்கி கணித்துள்ளது.
மிகவும் மோசமான சூழலில், இந்த நீரிணை வழியாக வரும் எண்ணெய் விநியோகம் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மிகக் குறைவாகவே நீடித்தால், 2027-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்குள் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 111 டொலராக இருக்கும் என்று அந்த வங்கி மதிப்பிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |