டெல்டா வைரஸை விட வேகமாக பரவும் Omicron: பிரித்தானிய அறிவியலாளர்கள் எச்சரிக்கை
பிரித்தானியாவில் Omicron வகை மரபணு மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ், டெல்டா வைரஸை விட வேகமாக பரவுவதாக தெரிவித்துள்ள அறிவியலாளர்கள், மருத்துவமனைகள் அதிக அழுத்தத்திற்குள்ளாகலாம் என எச்சரித்துள்ளார்கள்.
எதிர்பார்க்கப்படும் Omicron கொரோனா அலை, பிரித்தானியா எதிர்கொண்ட இரண்டாவது அலையை விட சற்றே வலிமை குறைந்ததாக இருக்கும் என்றாலும், அது மருத்துவமனைகளுக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
தடுப்பூசிகளை எதிர்க்கும் தன்மை மற்றும் அதிகரித்துள்ள தொற்றும் தன்மை, ஆன்டிபயாட்டிக்குகளிடமிருந்து தப்பிக்கும் தன்மை போன்ற காரணங்களால் டெல்டா வைரஸை விட Omicron மூன்றரை மடங்கு அதிகமாக மக்களை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வமாக பிரித்தானியாவில் 246பேருக்கு மட்டுமே Omicron வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாலும், உண்மையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த Omicron வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார் பேராசிரியர் Paul Hunter என்னும் East Anglia பல்கலைக்கழக தொற்று நோயியல் நிபுணர்.
டெல்டா வகை கொரோனா வைரஸை முந்தி, Omicron வகை கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைப் பார்க்கும்போது, அடுத்த சில வாரங்கள் அல்லது ஒரு மாதத்திற்குள் இந்த Omicron வைரஸ் மற்ற எல்லா வகை கொரோனா வைரஸ்களை தொற்று எண்ணிக்கையில் முந்தும் என தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவிக்கிறார்.
Omicron வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நாடாகிய தென்னாப்பிரிக்க நாட்டு மருத்துவர்கள் Omicron வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் குறைந்த அளவிலேயே நோய்வாய்ப்படுவதாக தெரிவித்துள்ள நிலையில், பிரித்தானிய அறிவியலாளர்களோ, அது அதிகம்பேரை தொற்றக்கூடியது என்ற வகையில், மருத்துவமனைகளுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கிறார்கள்.