பிரித்தானியாவில் இரட்டிப்பாகும் Omicron தொற்று பரவல்: அபாயம் தொடர்பில் எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
பிரித்தானியாவில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை Omicron தொற்று பரவல் இரட்டிப்பாவதாகவும், இது இன்னும் ஒரு வாரத்தில் உச்சம் பெறும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் தள்ளியுள்ள புதிய கொரோனா மாறுபாடு தொடர்பில் பிரித்தானிய சுகாதார செயலர் சஜித் ஜாவித் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளித்துள்ள விளக்கத்தில்,
புதிய கொரோனா மாறுபாடானது சமூக பரவலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து நாம் மீளும் நடவடிக்கைகளில் கண்டிப்பாக தோய்வு வரலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தற்போது 336 பேர்களுக்கு புதிய ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகவும் ஆபத்தான மாறுபாடாக கருதப்பட்ட டெல்டா மாறுபாடை விட, ஓமிக்ரான் மிக வேகமாக பரவும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
மாதக்கணக்கில் நமக்கு அவகாசம் இல்லை, சில வாரங்களிலேயே ஓமிக்ரான் மாறுபாடின் தாக்கம் பல மடங்கு அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். தற்போதைய சூழலில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஓமிக்ரான் தொற்றானது இருமடங்காக பெருகுவதாகவும், நவம்பர் மாத கடைசி வாரத்தில் அதற்கான தரவுகள் வெளியானதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
இதனிடையே, கிறிஸ்துமஸ் விடுமுறைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் செல்லும் முன்னர், டிசம்பர் 16ம் திகதி பிரதமர் போரிஸ் ஜோன்சன் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா மாறுபாடானது தொடர்ந்து நீடிக்கும் நிலையில், ஆண்டுக்கு ஒரு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள நேரலாம் என சுகாதார செயலர் சஜித் ஜாவித் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் புதிய ஓமிக்ரான் தொற்றால் 261 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்கொட்லாந்தில் 71 பேர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், வேல்ஸில் நால்வர் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஓமிக்ரான் தொற்றின் பரவல் இதே நிலையில் தொடர்ந்தால், அடுத்த மாத தொடக்கத்தில் பிரித்தானியா முழுமையும் மற்றும் உலக அளவிலும் டெல்டா பரவலைவிடவும் அதிகமாக ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்ய வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.