Omicron-ன் முதல் புகைப்படம்! 'டெல்டா வகை கொரோனாவை விட பயங்கரமானது'
தற்போது உலகை அச்சுறுத்திவரும் Omicron வகை கொரோனா வைரஸின் முதல் முப்பரிமாண படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம், Omicron-ல் உள்ள பிறழ்வுகளின் எண்ணிக்கை கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டில் உள்ள பிறழ்வுகளின் எண்ணிக்கையை விட இரட்டிப்பாக இருப்பதைக் காட்டுகிறது.
சீனாவில் முதல் கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் மாறுபாடுகளிலேயே (variant), இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட Delta தான் (B.1.617.2) மிகவும் அதிக பிறழ்வுகளைக் (Mutation) கொண்ட பயங்கரமான மாறுபாடு என கூறப்பட்டது.
ஆனால், கடந்த வாரம் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் கண்டறியப்பட்ட Omicron மாறுபாடு (B.1.1.529), டெல்டாவை விட ஆபத்தானது என மருத்துவ நிபுணர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முதலில் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரமாக பரவத் தொடங்கிய இந்த Omicron வகை வைரஸ், தற்போது, அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி என உலகம் முழுவதும் ஏராளமான நாடுகளில் இதில் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இது WHO-ஆல் 'கவலையின் மாறுபாடு' என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில், Omicron வகை வைரஸ் எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதை விவரிக்கும் வகையில், அதன் முதல் முப்பரிமாண புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை, இத்தாலியின் ரோம் நகரத்தில் உள்ள பாம்பினோ கெசு மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு வெளியிட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் குழு வெளியிட்ட ஒரு அறிக்கையில், “ஓமிக்ரானில் உள்ள பிறழ்வுகளின் எண்ணிக்கை டெல்டா மாறுபாட்டில் உள்ள பிறழ்வுகளின் எண்ணிக்கையை விட இரட்டிப்பாக இருப்பதை நாம் தெளிவாகக் காணலாம், எல்லாவற்றிற்கும் மேலாக மனித உயிரணுக்களுடன் தொடர்பு கொள்ளும் புரதத்தின் ஒரு பகுதியில் குவிந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.