இந்த நாட்டில் தான் Omicron தொற்று முதலில் காணப்பட்டது: சுகாதாரத்துறை வெளிப்படை
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் தான் ஓமிக்ரான் தொற்று முதலில் காணப்பட்டதாக சுகாதாரத்துறை தற்போது தெரிவித்துள்ளது.
தெற்கு ஆபிரிக்காவின் பொஸ்வானா நாட்டில் முதன் முதலில் Omicron தொற்று அடையாளம் காணப்பட்டதாக மருத்துவர் ஒருவர் தெரிவித்திருக்க, அதற்கும் ஒரு வாரம் முன்னர் நெதர்லாந்தில் கண்டறிந்ததாக அங்குள்ள சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவிக்க,
தற்போது மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவின் சுகாதாரத்துறை புதிய தகவலுடன் முன்வந்துள்ளது. நைஜீரியாவில் அக்டோபர் மாதத்தில் இருந்தே வித்தியாசமான கொரோனா மாறுபாடை அடையாளம் கண்டதாக புதன்கிழமை தேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
தெற்கு ஆபிரிக்க நாட்டில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்டதாக இதுவரை கூறிவந்துள்ள நிலையில், தற்போது முதன்முறையாக ஒரு மேற்கு ஆபிரிக்க நாடு இது தொடர்பில் பதிவு செய்துள்ளது குறித்த மாறுபாட்டின் உண்மையான தோற்றம் குறித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை 20 நாடுகளில் ஓமிக்ரான் தொற்று வியாபித்துள்ளது. மரபணு வரிசைமுறையை ஆய்வுக்கு உட்படுத்தியதிலும், ஓமிக்ரான் தொற்று அக்டோபரில் இருந்தே காணப்பட்டுள்ளதும் உறுதியாகியுள்ளது.
கடந்த வாரம் தென்னாபிரிக்காவில் இருந்து நைஜீரியா திரும்பிய இரு பயணிகளில் ஓமிக்ரான் தொற்று காணப்பட்டதை சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மட்டுமின்றி, அக்டோபரில் நைஜீரியாவில் பதிவான தரவுகளையும் தற்போது கண்டறியப்பட்டுள்ள மாதிரிகளும் ஒரேப்போன்றவை என்பதையும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.
தற்போது மாகாண நிர்வாகங்களையும் பொதுமக்களையும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்படவும் நைஜீரிய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
நைஜீரியாவில் கொரோனா சோதனைகள் மிகவும் மந்தமாகவே முன்னெடுக்கப்படுவதாலும், தலைநகரிலும், சோதனை எண்ணிக்கை மிகவும் குறைவு என்றே கூறப்படுகிறது.
ஆபிரிக்காவின் மக்கள் தொகை மிகுந்த நாடான நைஜீரியாவில் கொரோனாவின் புதிய மாறுபாடு முதன்முதலில் கண்டறியப்பட்டது, அங்குள்ள அரசாங்கத்தை மேலும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.