அன்று ரூ.150 சம்பளம் மட்டுமே - இன்றோ இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரின் தனிப்பட்ட வாழ்க்கை சோகம் நிறைந்த ஒன்றாக இருந்துள்ளது.
ஆகாஷ் தீப்
28 வயதான ஆகாஷ் தீப், இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கையான வேகப்பந்து வீச்சாளராக வளர்ந்து வருகிறார்.
2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் விளையாடியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்து முடிந்த சச்சின் - ஆண்டர்சன் கோப்பையில், தனது முதல் அரை சத்தத்தை பதிவு செய்ததோடு, அசத்தலாக பந்து வீசி முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.
ஒரே ஆண்டில் தந்தை, சகோதரர் உயிரிழப்பு
ஆனால், ஆகாஷ் தீப்பின் பின்னணி சோகம் நிறைந்த ஒன்றாக இருந்துள்ளது.
ஆகாஷ் தீப்பின் சிறு வயதில், அவரின் வீட்டிற்கு அருகே உள்ள பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளை ஆகாஷ் தீப்புடன் கிரிக்கெட் விளையாட அனுமதிப்பதில்லை.
கிரிக்கெட் விளையாடினால், படிப்பில் கவனம் இருக்காது. பீகாரில் இருந்து கிரிக்கெட்டில் சாதிப்பதை அவர்கள் சாத்தியமில்லாத ஒன்றாக கருதினார்கள்.
பள்ளி ஆசிரியரான ஆகாஷ் தீப்பின் தந்தையும் அவர் கிரிக்கெட் வீரராக ஆகுவதை விரும்பவில்லை. மாறாக காவல்துறை அல்லது அலுவலக உதவியாளர் போன்ற அரசு வேலைகளில் சேர்வதையே விரும்பினார்.
ஆகாஷ் தீப் தனது 19 வயதில், பக்கவாதத்தால் தனது தந்தையை இழந்துள்ளார். அடுத்த 6 மாதங்களில் அவரது மூத்த சகோதரரும் உயிரிழந்துள்ளார். இதனால், அவரது தாய் மற்றும் சகோதரிக்காக வருமானம் ஈட்டும் பொறுப்பை ஏற்றார் ஆகாஷ் தீப்.
ரூ.150 நாள் ஊதியத்திற்கு கூலி வேலை
தனது கிரிக்கெட் கனவை 3 ஆண்டுகளுக்கு ஒதுக்கி வைத்த ஆகாஷ் தீப், ரூ.150 நாள் ஊதியத்திற்கு பீகாரின் சோன் நதி அருகே லாரியில் மணல் ஏற்றும் வேலை பார்த்தார்.
அதன் பிறகு, தனது கிரிக்கெட் கனவை தொடர கொல்கத்தாவிற்கு இடம்பெயர்ந்த அவர், அங்கு YMCA United CC ஆகிய முக்கிய கிளப்களால் ஆர்மபத்தில் நிராகரிக்கப்பட்டார்.
ஒரு கட்டத்தில் அவரின் முதுகில் ஏற்பட்ட காயத்தால், அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் சூழல் நிலவியது. ஆனால், அவரின் பயிற்சியாளர் சௌராசிஸ் லஹிரி அவரின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து அவரை வழிநடத்தினார்.
2025 ஐபிஎல் தொடரில் அவர் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்காக விளையாடிய போது, அவரின் சகோதரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
சமீபத்தில் இங்கிலாந்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்களை கைப்பற்றி அசத்திய அவர், அதை தனது சகோதரிக்கு சமர்ப்பித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |