13 பில்லியன் டொலர் மதிப்பிலான பிட்காயின்களுடன் திடீரென மாயமான பெண்
ரஷ்யாவில் 13 பில்லியன் டொலர் மதிப்பிலான பிட்காயின்களுடன் மாயமான பெண் தொடர்பில் நான்கு ஆண்டுகளாக மர்மம் நீடித்து வருகிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பட்டதாரியான டாக்டர் Ruja Ignatova என்பவரே உலகின் மிகப் பெரிய முறைகேடுகளில் ஒன்றாக கருதப்படும் பிட்காயின் மோசடியில் ஈடுபட்டவர்.
கவர்ந்திழுக்கும் விளம்பரங்களால் பொதுமக்களை ஈர்த்து தமது நிறுவனத்தில் முதலீடு மேற்கொள்ள வைத்த ருஜா, 2017ல் திடீரென்று மாயமானார். அப்போது அவரிடம் 13 பில்லியன் டொலர் மதிப்பிலான பிட்காயின்கள் கைவசம் இருந்துள்ளது.
நான்கு ஆண்டுகள் கடந்தும், இதுவரை ருஜா எங்கிருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது. இவரது நிறுவனத்தின் இணை நிறுவனர் செபாஸ்டியன் கிரீன்வுட் 2018ல் கைது செய்யப்பட்டார்.
அவரது சகோதரர் கான்ஸ்டான்டின் இக்னாடோவ் மோசடி மற்றும் பணமோசடி தொடர்பில் 2019ல் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இவர் தொடர்பான விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் இறுதி தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளார்.
இவருக்கு 90 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. ருஜா மாயவதற்கு முன்னர் தமக்கு வியன்னா பின்னர் அங்கிருந்து ஏதென்ஸுக்கு விமானங்களை முன்பதிவு செய்ய கேட்டதாக கைதான சகோதரர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ருஜா அந்த விமானங்களில் பயணம் மேற்கொண்டாரா என்பதும் மர்மமாகவே உள்ளது என்கிறார்கள். ருஜா எங்கும் மாயமாகவில்லை, அவர் ரஷ்யாவில் தான் புது பெயர், முகவரியுடன் வாழ்கிறார் என்றும் பலம் வாய்ந்த பல்கேரியா கும்பல் அவருக்கு பாதுகாப்பளித்து வருவதாகவும் பலர் கூறுகின்றனர்.
இன்னும் சிலர், ருஜா ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் பதுங்கியுள்ளார் எனவும், அவரது நிறுவனம் சார்பில் துபாய் மாகாணத்தில் உள்ள வங்கி ஒன்றில் 500 மில்லியன் டொலர் தற்போதும் முடக்கப்படாமல் உள்ளது என்கிறார்கள்.
இல்லை, ருஜா இறந்துவிட்டார் எனவும் சிலர் நம்பி வருகின்றனர். நான்கு ஆண்டுகளாக பெண் ஒருவர் தமது இருப்பு தொடர்பில் எந்த தகவலையும் கசிய விடாமல் வாழ்ந்து வருகிறார் என்றால் அவர் மிகுந்த புத்திசாலியாக இருப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்கிறார்கள் சிலர்.
மட்டுமின்றி தமது வசீகர விளம்பரத்தால் 175 நாடுகளின் முதலீட்டாளர்களை அவர் ஏமாற்றியதே அதற்கு சாட்சி என்கிறார்கள்.