அந்த ஒரு ஓவர் மேட்சே மாறிவிட்டது! தோல்விக்கு பின் பேசிய டோனி: மகிழ்ச்சியில் ரிஷப் பாண்ட்
டெல்லி அணிக்கெதிரான தோல்வி ஒரு சிறிய தவறே தோல்விக்கு முக்கிய காரணமாக மாறிவிட்டது என்று சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டம் மிக முக்கிய ஆட்டமாக பார்க்கப்பட்டது. ஏனெனில் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதியதால், இவர்களில் யார் பலம் வாய்ந்த அணி என்பதை நிரூபிக்க போட்டி நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதே போன்று இரு அணிகளுமே சமமான பலத்துடன் இருந்தன. இருப்பினும் ஒரு சிறிய தவறுகளால் சென்னை அணி தோல்வியடைந்தது.
டெல்லி அணி வெற்றி பெற்றது. இது குறித்து சென்னை அணியின் கேப்டன் ஆன டோனி கூறுகையில், இப்போட்டியில் நாங்கள் ஒரு 150 ஓட்டங்களோ அல்லது அதற்கு அருகிலோ சென்றால் போதும் என்று நினைத்தோம்.
ஏனெனில் முதலில் சில விக்கெட்டுகளை இழந்ததால் பொறுமையாக விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் பின் 15 மற்றும் 16-வது ஓவர்களில் அடித்து ஆட நல்ல ஒரு அடித்தளம் கிடைத்தது. இருப்பினும் அதை நாங்கள் சரியாக பயன்படுத்தவில்லை.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இந்த மைதானத்தில் பேட்டிங் கொஞ்சம் கடினமாகவே இருந்தது. நாங்கள் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டோமோ அதே அளவிற்கு டெல்லி பேட்ஸ்மேன்களும் கஷ்டப்பட்டனர்.
இருப்பினும் டெல்லி வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுவிட்டனர். முதல் 6 ஓவர்களில் ஒரு ஓவர் பெரிய ஓவராக அமைந்துவிட்டது. அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கும் போது, இது போன்று நடப்பது சகஜம் தான் என்று கூறினார்.
வெற்றி பெற்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பாண்ட், எளிதாக முடிக்க வேண்டிய போட்டியை கொஞ்சம், கஷ்டமாக முடித்துவிட்டோம். இறுதியில் வெற்றியோடு முடிக்கும் போது, மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம், தற்போது அதே போன்று இருப்பது மேலும் மகிழ்ச்சியை கொடுப்பதாக தெரிவித்தார்.