கொரோனா கட்டுப்பாடுகள் ஏதுமற்ற ஒரே ஒரு ஐரோப்பிய நாடு
தற்போதைய சூழலில் கொரோனா பரவல் தொடர்பான கட்டுப்பாடுகள் ஏதுமற்ற ஒரே ஒரு ஐரோப்பிய நாடாக மாறியுள்ளது டென்மார்க்.
இங்குள்ள 70% மேற்பட்ட மக்கள் முழுமையாக தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, இனிமேல் இரவு விடுதிகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றுகளும் சமர்ப்பிக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் அமுலில் இருந்த கடைசி கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.
டென்மார்க்கில் கொரோனா பரவல் தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்பது மிகுந்த நிம்மதியை தருவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் ஐஸ்லாந்தில் அனைத்து கொரோனா பரவல் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. ஆனால் தொற்று மீண்டும் கண்டறியப்பட்ட நிலையில் சில கட்டுப்பாடுகள் அமுலுக்கு கொண்டுவந்துள்ளன.
டென்மார்க்கை பொறுத்தமட்டில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தும் வகையில் மார்ச் 2021ல் கொரோனா கடவுச்சீட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 1ம் திகதி முதல் அருகாட்சியகம், 500 பேர்களுக்கும் குறைவானோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கும் கொரோனா அனுமதி சீட்டு தேவை இல்லை என அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆகஸ்ட் மத்தியில் இருந்து பொது போக்குவரத்தில் மாஸ்க் கட்டாயமல்ல என அறிவித்தது. சனிக்கிழமை ஐரோப்பாவிலேயே முதல்முறையாக 50,000 பேர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டென்மார்கை பொறுத்தமட்டில், நாளுக்கு 500 பேர்களுக்கு மட்டுமே தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
5.8 மில்லியன் மக்கள் தொகையில் 73 விழுக்காடு பேர்களுக்கு முழுமையாக தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 65 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 95% பேர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இருப்பினும் பூஸ்டர் தடுப்பூசியும் தயார் நிலையில் இருப்பதாக சென்மார்க் நிர்வாகம் அறிவித்துள்ளது.