24 மணி நேரத்தில் 130 ஹவுதிகளை கொன்ற சவுதி கூட்டுப்படை
ஏமன் - சவுதி கூட்டுப்படையினர் முன்னெடுத்த வான்வழித் தாக்குதலில் செவ்வாய்க்கிழமை மட்டும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 130 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டின் மரீப் மாகாணத்தில் எண்ணை வளம் மிக்க கிணறுகளைக் கைபற்றும் முயற்சியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் ஏமன் அரசு அவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அடிக்கடி தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களில் மரீப் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது ஏமன் தலைமையிலான சவுதி கூட்டுப் படையினர் பதுங்கியிருந்து தொடர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில் மரிப் மற்றும் அல்-பைதா மாவட்டத்தில் தாக்குதல் நடத்திய போது ஹவுதி அமைப்பைச் சேர்ந்த 130 பேர் உயிரிழந்திருந்ததாகவும் அவர்கள் பயன்படுத்திய 16 ஆயுதம் தாங்கிய வாகனங்களும் தகர்க்கப்பட்டதாகவும் கூட்டுப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து கூட்டுப்படையினர் தாக்குதலில் கடந்த ஒரு மாதத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 1200 பேர் வரை பலியாகியிருக்கிறார்கள்.
முன்னதாக நவம்பர் 6ம் திகதி ஏமன் - சவுதி கூட்டுப்படையினர் முன்னெடுத்த வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 145 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.