30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிறுவனம் - பின்னணி என்ன?
ஆரக்கிள் நிறுவனம் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஆரக்கிள்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஆரக்கிள் நிறுவனம், உலகின் பல்வேறு நாடுகளில் தங்களது அலுவலகங்களை வைத்துள்ளது. லட்சக்கணக்கானோர் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இதன் நிறுவனர் லாரி எல்லிசன், 188 பில்லியன் டொலர் சொத்துமதிப்புடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், இன்று உலகளவில் சுமார் 30,000 ஊழியர்களை ஆரக்கிள் நிறுவனம் பணி நீக்கம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பணி நீக்கம் குறித்து ஊழியர்களுக்கு காலை 5 - 6 மணியளவில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவை சேர்ந்த ஊழியர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் சுமார் 30,000 ஊழியர்கள் உள்ள நிலையில், அதில் 12,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தங்களிடம் முன்னதாக உயரதிகாரிகள் விவாதிக்க கூட இல்லை என பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ரெட்டிட் தளத்தில் தெரிவித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாரிய முதலீடு மற்றும் தரவு மையங்களை கட்டுவதற்கு பாரிய அளவில் நிதி முதலீடு செய்யப்பட உள்ளதால், செலவினத்தை குறைக்கும் வகையில், இந்த பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் ஓராண்டு பணிபுரிந்த ஒவ்வொரு ஊழியருக்கும் 15 நாட்கள் சம்பளத்துடன், பணி நீக்க தேதி வரையிலான ஒரு மாத நிலுவைச் சம்பளம், விடுப்புப் பணமாக்கம், தகுதியின் அடிப்படையில் பணிக்கொடை மற்றும் ஒரு மாத அறிவிப்புக் காலத்திற்கான ஊதியம் ஆகியவற்றையும் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்திற்குள் மீண்டும் பாரிய பணிநீக்கம் நடைபெற உள்ளதால் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |