பொது இடங்களில் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை! பிரபல நாடு அதிரடி அறிக்கை
கொரோனா வைரஸ் தொற்று விகிதம் குறைந்தது வருவதால் இனி வெளிப்புற பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியவேண்டியது கட்டாயம் இல்லை என இஸ்ரேல் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டில் நாளை முதல் (ஏப்ரல் 18) பொதுவெளியில் மக்கள் முகக்கவசம் அணியவேண்டிய அவசியம் இல்லை என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இருப்பினும் அதிகமான மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்துகொள்வது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல் திரையரங்கம், பார்ட்டி ஹால் உள்ளிட்ட உட்புறங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் அதற்கு இன்னும் விலக்கு அளிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் கடந்த டிசம்பர் 20-ஆம் திகதி கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வல்லரசு நாடுகளை விட மிக வேகமாக அதன் மக்களுக்கு தடுப்பூசியை வழங்கியது.
மார்ச் மாத இறுதியில் நாட்டில் 12 முதல் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிட்டு வருவதாக கூறியது.
பெரும்பாலான பெரியவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதனால், கொரோனா கட்டுப்பாடுகளை இஸ்ரேல் அரசு படிப்படியாக தளர்த்திவருகிறது.