படகு கவிழ்ந்து பயங்கர விபத்து...! 55 பேர் சடலமாக மீட்பு... நூற்றுக்கணக்கானோர் மாயம்!
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 55 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காங்கோ ஆற்றில் கூட்ட நெரிசலுடன் பயணித்த படகு புதன்கிழமை அதிகாலையில் வடக்கு மங்கலா மாகாணத்தில் பம்பா நகருக்கு அருகில் கவிழ்ந்துள்ளது.
இதுவரை 39 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மங்கலா மாகாண ஆளுநரின் செய்தித்தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், 55 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 75 பேர் மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை தெளிவாக இல்லை.
எனினும், குறித்த படகில் மொத்தம் 400 பேர் பயணித்ததாக உயிர்பிழைத்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மோசமான சாலை உள்கட்டமைப்பு காரணமாக காங்கோ ஆறும் அதன் துணை ஆறுகளும் மக்களுக்கு ஒரு முக்கியமான போக்குவரத்து பாதையாக திகழ்கிறது.
படகுகளில் பெரும்பாலும் கூட்டம் அதிகமாக இருப்பதும் அதனால் விபத்துகள் ஏற்படுவதும் கங்கோவில் ஒரு பொதுவான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.