பஹல்காம் தாக்குதல்; மாணவர் விசாவில் பாகிஸ்தானுக்கு சென்று பயங்கரவாதியாக திரும்பிய நபர்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பஹல்காம் தாக்குதல் குற்றவாளிகள்
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின், நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலை நேரில் கண்டவர்களின் உதவியுடன், தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் பயங்கரவாதிகளின் வரைபடங்களை காவல்துறையினர் வெளியிட்டனர்.
இதில் சுலைமான் என்கிற ஹாஷிம் மூசா மற்றும் தல்ஹா பாய் என்ற அலி பாய் ஆகிய 2 பாகிஸ்தானியர்களின் வரைபடத்தையும், அப்துல் ஹுசைன் தோகர் என்ற ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவரின் வரைபடத்தையும் காவல்துறை வெளியிட்டது.
இவர்களை கைது செய்வதற்கு வழிவகுக்கும் நம்பகமான தகவல்களை வழங்குவோருக்கு, ₹20 லட்சம் வெகுமதி வழங்குவதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை அறிவித்துள்ளது.
மாணவர் விசாவில் பாகிஸ்தான் பயணம்
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அப்துல் ஹுசைன் தோகர் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாரா பகுதியில் உள்ள குர்ரே கிராமத்தைச் சேர்ந்த ஆதில் தோக்கர், கடந்த 2018 ஆம் ஆண்டு மாணவர் விசா மூலம் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
இந்தியாவை விட்டு வெளியேறும் முன்பே, பாகிஸ்தானில் செயல்படும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் அவர் தொடர்பில் இருந்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுக்கு சென்றதும் அவர் தனது குடும்பத்தினருடனான உறவை துண்டித்து விட்டார். பாகிஸ்தானில் இருந்தபோது தோக்கர், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிடமிருந்து சித்தாந்த மற்றும்ராணுவப் பயிற்சியைப் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் இந்தியாவிற்குள் ஊடுருவல்
கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ரோந்து பணிகளுக்கு சவாலாக உள்ள கரடு முரடான பாதைகளை உடைய, பூஞ்ச்-ராஜோரி செக்டார் வழியாக கட்டுப்பாட்டுக் கோட்டை (LoC) தாண்டி, மீண்டும் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளார்.
அவருடன் பாகிஸ்தானை சேர்ந்த ஹாஷிம் மூசா மற்றும் தல்ஹா பாய் என்ற அலி பாய் உட்பட 3 முதல் 4 நபர்கள், சட்டவிரோதமாக ஊடுருவியிருப்பார்கள் என உளவுத்துறை சந்தேகிக்கிறது.
சர்வதேச கவனத்தை ஈர்க்கவும், அதிக அளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தவதற்கும் பொருத்தமான இடத்தை தீவிரமாக தேடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த பைசரன் போன்ற சுற்றுலாத் தலங்கள், கடந்த மார்ச் மாதம் மீண்டும் திறக்கப்பட்டதால், அந்த பகுதியை தாக்குதல் நடத்த தேர்வு செய்தனர்.
ஏப்ரல் 22 அன்று, மதியம் 1:50 மணியளவில், தோக்கரும் அவரது கூட்டாளிகளும் பைசரனின் பைன் காடுகளிலிருந்து துப்பாக்கிகளுடன் வெளியே வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இரு நாட்களுக்கு முன்னர், காஷ்மீரில் உள்ள தோக்கரின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடிபொருள் வைத்து தகர்த்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |