4 பெண்கள் நிர்வாணமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்.! பாகிஸ்தானில் அதிரவைக்கும் சம்பவம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடையில் திருடியதாக குற்றம் சாட்டி, ஒரு இளம்பெண் உட்பட 4 பெண்களை ஒரு குழுவினர் உடைகளைக் கழற்றி அடித்து இழுத்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாகூரில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைசலாபாத்தில் சென்ற திங்கள்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஒரு பதின்ம வயது பெண் உட்பட 4 பெண்கள், அவர்களது உடைகள் கழற்றப்பட்ட நிலையில், தங்கள் மாணத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு துண்டு துணியாவது தருமாறு தங்களைச் சுற்றியுள்ள மக்களிடம் கெஞ்சியுள்ளனர்.
இருப்பினும் அவர்களுக்கு யாரும் உதவ முன் வரவில்லை, அதேசமயம் அவர்கள் மேலும் தடிகளால் தாக்கப்பட்டனர்.
அப்பெண்கள் கதறி அழுததுடன், தங்களை விடுவிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. ஒரு மணி நேரம் தெருக்களில் நிர்வாணமாக ஊர்வலமாக நடக்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில பொலிஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
"இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஐந்து முக்கிய குற்றவாளிகளை நாங்கள் கைது செய்துள்ளோம்" என்று பஞ்சாப் காவல்துறை செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.
இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும், சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் 5 சந்தேக நபர்கள் மற்றும் பலருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கின்படி, அவர்கள் பைசலாபாத் பாவா சாக் சந்தைக்கு குப்பைகளை சேகரிக்கச் சென்றதாக பாதிக்கப்பட்ட ஒருவர் கூறினார்.
“தாகம் எடுத்த நாங்கள் உஸ்மான் எலெக்ட்ரிக் ஸ்டோருக்குள் சென்று தண்ணீர் பாட்டில் கேட்டோம். ஆனால் அதன் உரிமையாளர் சதாம் நாங்கள் திருடும் நோக்கத்தில் கடைக்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டினார். மார்க்கெட் பகுதி முழுக்க எங்களை அடித்து, உடைகளை கழற்றி, எங்களை வீடியோ எடுத்தனர்... இந்தக் கொடுமையை தடுக்க கும்பலில் இருந்த யாரும் குற்றவாளிகளைத் தடுக்க முயற்சிக்கவில்லை" என்று புகார் கூறப்பட்டுள்ளது.
பைசலாபாத் காவல்துறை தலைவர் டாக்டர் அபித் கான் கூறுகையில், தப்பி ஓடிய குற்றவாளிகளை கைது செய்ய சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், சதாம் உட்பட ஐந்து முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.