பாகிஸ்தானிடம் இருந்து கழுதைகளை வாங்கி குவிக்கும் சீனா! கேட்க கேட்க கொடுக்கும் இம்ரான்கான்: வெளியான இதன் பின்னணி
சீனாவிடம் வாங்கிய கடனை பாகிஸ்தான் கழுதைகளை விற்று அடைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் அதிக கழுதைகளை கொண்ட மூன்றாவது நாடாக பாகிஸ்தான் உள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானில், எருமைகளின் எண்ணிக்கை 12 லட்சமாகவும், ஆடுகள் எண்ணிக்கை 3.2 கோடியில் இருந்து 3.5 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
செம்மறி ஆடு இனப்பெருக்க எண்ணிக்கை ஆண்டுக்கு 4 லட்சமாக உயர்ந்துள்ளது. இதேபோல், கழுதைகளின் எண்ணிக்கை கடந்த ஒரே ஆண்டில் ஒரு லட்சம் அதிகரித்துள்ளது.
இதனால் தற்போது பாகிஸ்தானில் 56 லட்சம் கழுதைகள் உள்ளன. பாகிஸ்தான் தனது நாட்டில் கழுதைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் சீனா தான் என்று கூறப்படுகிறது.
சீனாவில் கழுதைகளுக்கு அதிகளவில் கிராக்கி உள்ளது. இதில் இருந்து பல்வேறு நோய்களுக்கு பாரம்பரிய மருந்துகள் கிடைக்கின்றன. ஆண்மையை அதிகரிக்கும் கொழுப்பு சத்துகளும் உள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இதனால், பாகிஸ்தானிடம் இருந்து ஆண்டுதோறும் 80 ஆயிரம் கழுதைகளை சீன நிறுவனங்கள் வாங்கி கொன்று, மருந்துகளை தயாரிக்கின்றன.
இதன் மூலமாக பல கோடி ரூபாயை பாகிஸ்தான் வருமானமாக ஈட்டுகிறது. மேலும், சீனாவிடம் இருந்து வாங்கியுள்ள பல ஆயிரம் கோடி கடனை, கழுதைகள் விற்பனை மூலமாகவும் பாகிஸ்தான் அரசு சரிக்கட்டி வருகிறது.
இதன் காரணமாகவே, கழுதைகள் இனப்பெருக்கத்தை பெருக்குவதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆர்வம் காட்டி வருகிறார். கழுதைக்காகவே இந்நாட்டில் தனி மருத்துவமனைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.