இந்தியாவுக்கு தேவையான உதவி செய்யுங்க இம்ரான்கான்! பாகிஸ்தான் இணையவாசிகள் செய்த நெகிழ்ச்சி செயல்
கொரோனாவால் இந்தியா தவித்து வரும் நிலையில், இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் படி பாகிஸ்தான் இணையவாசிகள் #indianeedsoxigen என்ற ஹேஷ்டேக்கை டிரண்டாக்கி வருகின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகள் கொரோனாவால் தத்தளித்துக் கொண்டிருந்த போது, இந்தியாவில் கொரோனா பரவல் அந்தளவிற்கு இல்லாமல் இருந்தது. உயிரிழப்பும் குறைவாக இருந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது. மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர், சமீப நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், இந்தியாவின் வட மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருவதால், இது போன்ற சூழலில், இந்தியாவுக்கு ஆதரவாக இருக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்நாட்டு இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் பாகிஸ்தானால் முடிந்த உதவிகளை இந்தியாவுக்கு வழங்குமாறும் அவர்கள் இணையத்தில், பதிவிட்டுகின்றனர். இதன் காரணமாக பாகிஸ்தானில் #indianeedsoxigen என்ற ஹாஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பாகிஸ்தானில் செயல்படும் அப்துல் சத்தார் தன்னார்வ அமைப்பு மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவுக்கு உதவ நாங்கள் தயார் என்று இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.