இலங்கையர் நால்வர் பணயக்கைதியாக்கப்பட்ட விவகாரம்: சிக்கிய ஆசிய நாட்டவர் குழு
வேலைவாய்ப்புக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றி, நான்கு இலங்கையர்களை பணயக்கைதியாக்கிய பாகிஸ்தான் நாட்டவர்கள் நால்வர் கைதாகியுள்ளனர்.
ரகசிய தகவலை அடுத்தே கைது
குறித்த நால்வரையும் நேபாள நாட்டில் காட்மண்டு பொலிசார் கைது செய்துள்ளனர். வியாழக்கிழமை கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே அந்த நால்வரையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி நகுல் போகரேல் தெரிவித்துள்ளார்.
சிக்கிய நால்வரும் 42 மற்றும் 62 வயதுடையவர்கள் என்றும், கனடா, ருமேனியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வேலைக்கு உத்தரவாதம் அளிப்பதாக கூறி பல மில்லியன் ரூபாய் பணத்தை அந்த இலங்கையர்கள் நால்வரிடம் இருந்தும் இவர்கள் கைப்பற்றியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இலங்கையில் இருந்து நேபாளத்திற்கு வரவழைக்கப்பட்ட அந்த நால்வரும் பாகிஸ்தானியர்களால் கொடூர சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவான விசாரணை
மேலும் கடவுச்சீட்டுகளை பறித்துக் கொண்டு காட்மண்டு நகரில் பல ஹொட்டல்களில் தங்கவைத்துள்ளனர். ஆனால் அவர்களின் நோக்கம் தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மீட்கப்பட்ட இலங்கையர்கள் நால்வரும், சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைதான நான்கு பாகிஸ்தான் நாட்டவர்கள் மீதும் ஆட்கடத்தல், கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதியப்படும் என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |