சொந்த பிள்ளைகள் கண் முன்னே... பிரெஞ்சு தாயாருக்கு வெளிநாட்டில் நேர்ந்த கொடூரம்: வெளியான தீர்ப்பு
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பிரெஞ்சு தாயார் ஒருவரை அவரது மூன்று பிள்ளைகளின் கண்முன்னே கூட்டு வன்கொடுமைக்கு இரையாக்கிய இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மரண தண்டனை
கடந்த 2020 செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடந்த இச்சம்பவத்திலேயே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அபித் மல்ஹி மற்றும் ஷஃப்கத் அலி ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு, ஆட்கடத்தல், கொள்ளை மற்றும் பயங்கரவாதக் குற்றங்களுக்காகத் தற்போது தண்டனைப் பெற்றுள்ளனர்.

சியால்கோட்-லாகூர் பிரதானசாலையில் நடந்த இத்தாக்குதல் சம்பவத்தில் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் தங்கள் தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர்; அரசுத் தரப்பின் சம்பவ விளக்கத்தில் முரண்பாடுகள் இருப்பதாகவும், நீதிபதியின் தீர்ப்பு அநீதியானது என்றும் அபித் மல்ஹி மற்றும் ஷஃப்கத் அலி தரப்பில் வாதிட்டுள்ளனர்.
ஆனால் புதன்கிழமையன்று, அந்த இருவருக்கும் எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அரசுத் தரப்பு வாதிட்டதை அடுத்து, இரண்டு நீதிபதிகள் அந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தனர்.
கடந்த 2020 செப்டம்பர் 9 அன்று, லாகூரிலிருந்து வெளியே செல்லும் பிரதான சாலையில் எரிபொருள் தீர்ந்துபோனதால் பிரான்ஸ் நாட்டவரான அப்பெண்ணும் அவரது மூன்று பிள்ளைகளும் தவித்ததை அடுத்து, உதவி செய்யும் பொருட்டு அணுகிய மல்ஹியும் அலியும் தாக்குதலைத் தொடுத்தனர்.
உதவிக்காகக் காத்திருந்த அவர் தங்களின் காரின் கதவுகளைப் பூட்டியிருந்தார்; ஆனால், மல்ஹியும் அலியும் ஒரு ஜன்னலை உடைத்து அவரை வெளியே இழுத்துச் சென்று, அச்சத்தில் உறைந்திருந்த அவரது குழந்தைகளின் கண் முன்னாலேயே துப்பாக்கி முனையில் அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கியுள்ளனர்.
பின்னர் அவர்கள் சம்பவயிடத்தில் இருந்து தப்பி ஓடுவதற்கு முன், பணத்தையும், நகைகளையும், வங்கி அட்டைகளையும் திருடிச் சென்றனர். இந்த நிலையில், அந்தப் பெண் மன அதிர்ச்சிக்கு உள்ளானார் என்றும், ஆனாலும் தன்னைத் தாக்கியவர்களைப் பற்றிய சில அடிப்படை விவரங்களை அவரால் அளிக்க முடிந்தது என்றும் காவல்துறை தெரிவித்தது.

பெரும் போராட்டங்கள்
துரிதமாக செயல்பட்ட பொலிசார், சம்பவம் நடந்த அடுத்த நாளே, அந்த இருவரையும் கைது செய்தனர். விசாரணையின் போது பாதிக்கப்பட்டவர் அந்த இருவரையும் அடையாளம் காட்டினார், மேலும் அலி நீதிபதி முன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில், வழக்கின் முக்கியத்துவம் கருதி, 2021ல் ஒரு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் விசாரணையை முன்னெடுத்தது. இதனிடையே, அந்தப் பெண் ஏன் இரவு தாமதமாகத் தனியாக வெளியே இருந்தார் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன.
தாக்குதல் நடந்த மறுநாள், லாகூரின் மூத்த காவல்துறை அதிகாரியான உமர் ஷேக், ஊடகங்கள் முன், அந்தப் பெண்ணும் ஓரளவு குற்றத்திற்குப் பொறுப்பு என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார்.

தன் சிறு குழந்தைகளுடன் தனியாக இருந்த நிலையில், ஏன் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள சாலையைத் தெரிவு செய்யவில்லை என்றும் உமர் ஷேக் கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரது கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவலான எதிர்வினையைத் தூண்டின; பாகிஸ்தானியர்கள் அவரை, பாதிக்கப்பட்டவரையே குறை கூறுவதாகச் சாடினர்.
பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்துமாறு மனித உரிமை ஆர்வலர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, மரண தண்டனையைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |