பாலஸ்தீன தேசிய கால்பந்து வீரரை கைது செய்த இஸ்ரேல்
ஜெருசலேமில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பாலஸ்தீன மகளிர் தேசிய கால்பந்து அணியைச் சேர்ந்த வீராங்கனை ஒருவரின் காவலை, இஸ்ரேலிய அதிகாரிகள் நீட்டித்துள்ளனர்.
திட்டமிட்டு குறிவைக்கும்
செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்ட 20 வயது ராண்ட் ஹலவானியின் காவல் நீட்டிப்பை, பாலஸ்தீன கால்பந்து சங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

பாலஸ்தீன கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹலவானி மற்றும் முன்னாள் தேசிய அணி வீரர் ஒருவரின் கைது என்பது தனித்த ஒரு நிகழ்வு அல்ல என்றும்;
மாறாக, பாலஸ்தீனிய விளையாட்டு வீரர்களைத் திட்டமிட்டு குறிவைக்கும், எவ்விதப் பொறுப்புக்கூறலும் இன்றித் தொடர்ந்துவரும், நன்கு ஆவணப்படுத்தப்பட்ட ஒரு நடைமுறையின் அங்கமே இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜெருசலேமுக்கான பாலஸ்தீன ஆளுநரகத்தின் தகவலின் அடிப்படையில், ஹலவானியின் காவலை இஸ்ரேலிய நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வரை நீட்டித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், இஸ்ரேலிய இராணுவம் முன்னாள் தேசிய கால்பந்து வீராங்கனையும் பிர்ஸைட் பல்கலைக்கழக மாணவியுமான நடாலி அபு தியேவையும், மேலும் மூன்று இளம் பாலஸ்தீனியப் பெண்களையும் கைது செய்தது.
அந்த நான்கு பெண்களும் பயங்கரவாதச் செயல்பாடுகளையும், பயங்கரவாதம் தொடர்பான கூடுதல் நடவடிக்கைகளையும் ஊக்குவித்ததாகச் சந்தேகிக்கப்படுவதாக இஸ்ரேல் இராணுவம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மிகுந்த அதிர்ச்சியும் திகிலும்
பாலஸ்தீனியக் கல்வி மற்றும் மாணவர்களின் கல்வி உரிமையைக் குறிவைக்கும் இஸ்ரேலின் திட்டமிட்ட கொள்கைகளின் ஒரு பகுதியே இந்தக் கைது நடவடிக்கைகள் என பிர்ஸைட் பல்கலைக்கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நடாலி அபு தியே சார்ந்திருந்த ஜோர்டான் மற்றும் புனித நிலத்தின் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆயர் இமாத் ஹடாத், அவரை விடுவிக்கக் கோரியுள்ளார்.

இந்தச் செய்தியாலும், அவர் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது அவரது குடும்பத்தினருக்கு இன்னும் தெரியவில்லை என்ற செய்தியாலும் நாங்கள் மிகுந்த அதிர்ச்சியும் திகிலும் அடைந்துள்ளோம் என்று ஹடாத் செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாலஸ்தீனப் பகுதிகளில் கைதிகளின் உரிமைகளுக்கான பிரதான அமைப்பான கைதிகள் மன்றத்தின் தகவலின் அடிப்படையில், மூன்று சிறார்கள் மற்றும் மூன்று கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 89 பாலஸ்தீனப் பெண்கள் தற்போது இஸ்ரேலிய சிறைகளில் உள்ளனர்.
பாலஸ்தீன அதிகார சபையுடன் தொடர்புடைய கைதிகள் சங்கம், சில சமயங்களில் அரபு இஸ்ரேலியர்கள் என்று அழைக்கப்படும் இஸ்ரேலின் பாலஸ்தீன குடிமக்கள் உட்பட 9,400-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருப்பதாக மே மாத இறுதியில் அறிவித்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |