9 சிறார்கள் உட்பட பலர் கொத்தாக மரணம்... இரவோடு இரவாக இஸ்ரேல் கொலைவெறி தாக்குதல்
ஜெருசலேம் தொடர்பாக பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே மூண்டுள்ள பெரும் வன்முறையால் காசா பகுதியில் கொத்தாக 20 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீன கிளர்ச்சியாளர்கள் ஜெருசலேம் குறிவைத்து ரொக்கெட் தாக்குதல் முன்னெடுத்த நிலையிலேயே, இஸ்ரேலிய வான்படை திடீரென்று தாக்குதலை முன்னெடுத்ததாக கூறப்படுகிறது.
காசாவில் எல்லைக்கோடு தாண்டப்பட்ட சூழ்நிலையில் தாங்கள் தாக்குதல் தொடுத்ததாக இஸ்ரேல் ராணுவம் பதிலளித்துள்ளது.
காசா முனையில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியதில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி மற்றும் சிறார்கள் உள்பட மொத்தம் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காசா நகரம் மட்டுமின்றி சுற்றுவட்டார துறைமுகப்பகுதி முழுவதும் ரொக்கெட் வீச்சும் இஸ்ரேலிய வான்படை தாக்குதலும் தொடர்ந்ததாக தெரிய வந்துள்ளது.
இதனிடையே, உள்ளூர் நேரப்படி நள்ளிரவுக்கு சற்று முன்னர், பாலஸ்தீனிய கிளர்ச்சியாளர்கள் சுமார் 150 ரொக்கெட்டுகளை இஸ்ரேலுக்குள் வீசியதாக இஸ்ரேலின் இராணுவம் கூறியது,
ஆனால் டசின் கணக்கான ரொக்கெட்டுகளை தங்களின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளால் தடுத்து செயலிழக்க செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ரொக்கெட் தாக்குதலால் ஜெருசலேம் மற்றும் இஸ்ரேலின் பிற நகரங்களில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் யூதர்கள் தங்களுக்கு சொந்தமானது என்று கூறும் நிலத்தில் வசித்து வந்த பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்ற இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்துவந்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஜெருசலேமில் உள்ள Al-Aqsa மசூதி அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் பொலிசாருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
முதலில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது தாக்குதலை தொடங்கினர். அதன் பின்னர் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலில் பாலஸ்தீனியர்கள் சுமார் 300 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனத்தின் ரெட் கிரசண்ட் சொசைட்டி தெரிவித்துள்ளது.