நீண்ட 74 வருடங்களாக மாயமான பயணிகள் விமானம்... உடைந்த பாகங்கள் மீட்பு
விமானப் போக்குவரத்து வரலாற்றின் மிக முக்கியமான பேரிடர்களில் ஒன்றின் நினைவைச் சுமந்தபடி, அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான பயணிகள் விமானம் ஒன்றின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது.
74 வருடங்களுக்குப் பிறகு
அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான பான் அமெரிக்கன் வேர்ல்ட் ஏர்வேஸ் (Pan American World Airways) விமானத்தின் சிதைவுகளே தற்போது மீட்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்து 74 வருடங்களுக்குப் பிறகு, புவேர்ட்டோ ரிக்கோ கடற்பகுதியில் பான் ஆம் விமானம் 526A-இன் சிதைவுகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பு பல தசாப்தங்களாக நீடித்திருந்த ஒரு விமானப் போக்குவரத்து மர்மத்தைத் தீர்த்தது மட்டுமல்லாமல், மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370 உள்ளிட்ட காணாமல் போன பிற விமானங்கள் குறித்தும் பதில்களுக்காகக் காத்திருக்கும் குடும்பத்தினருக்குப் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது.
1952-ஆம் ஆண்டு ஏப்ரல் 11-அன்று, பியூர்ட்டோ ரிக்கோவில் உள்ள சான் ஜுவானின் இஸ்லா கிராண்டே விமான நிலையத்திலிருந்து, நியூயார்க்கின் ஐடில்வைல்ட் விமான நிலையத்திற்கு (தற்போதைய ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையம்) பான் ஆம் விமானம் 526A புறப்பட்டது.
சம்பவத்தன்று, 'கிளிப்பர் என்டேவர்' (Clipper Endeavor) என்ற டக்ளஸ் DC-4 ரக அந்த விமானத்தில், 64 பயணிகளும் ஐந்து பணிக்குழு உறுப்பினர்களும் இருந்தனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. முதலில் மூன்றாவது இயந்திரம் செயலிழந்தது, அதைத் தொடர்ந்து நான்காவது இயந்திரமும் செயலிழந்தது.
இதனையடுத்து விமானி திரும்பிச் செல்ல முயன்றார், ஆனால் சான் ஜுவானுக்கு வடமேற்கே சுமார் 18 கிலோமீற்றர் தொலைவில் கொந்தளிப்பான கடலில் விமானத்தை இறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
விமானம் கடலில் மோதிய பிறகு அதன் வால் பகுதி உடைந்து பிரிந்துவிட்ட போதிலும், முக்கியப் பகுதி (கேபின்) சேதமடையாமல் இருந்தது; மேலும், விபத்துக்காலத் தரையிறக்கத்தின்போது அதில் இருந்த 69 பேரும் ஆரம்பத்தில் உயிர் தப்பினர்.

இருப்பினும், சில நிமிடங்களிலேயே விமானத்திற்குள் தண்ணீர் புகத் தொடங்கியது. விமானம் புறப்படுவதற்கு முன் அவசரக்கால வெளியேறும் வழிகள் அல்லது உயிர் காக்கும் அங்கிகளைப் (life jackets) பயன்படுத்துவது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படாததால், பல பயணிகள் உள்ளேயே தங்கிவிட்டனர்.
மேலும், சிலர் மொழிப் பிரச்சினையாலும் தகவல் பரிமாற்றத்தில் சிரமத்தை எதிர்கொண்டனர். அந்த விமானம் மூன்று நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் மூழ்கியது. அமெரிக்கக் கடலோரக் காவல் படையினரும் விமானப் படையினரும் 17 பேரை உயிருடன் மீட்க முடிந்தாலும், 39 பயணிகளை மீட்கவே முடியவில்லை.
2,000 அடி ஆழத்தில்
பின்னர் விசாரணை அதிகாரிகள், இயந்திரச் சிக்கல்களுக்குப் பராமரிப்புக் குறைபாடுகளே காரணம் என்று குற்றம் சாட்டினர் மற்றும் பயணிகளுக்கு விமானப் பயணத்திற்கு முந்தைய கட்டாயப் பாதுகாப்பு விளக்கங்களை பரிந்துரைத்தனர்.
அந்தப் பரிந்துரைகள் நாளடைவில் உலகம் முழுவதும் உள்ள வணிக விமானப் பயணங்களில் ஒரு வழக்கமான நடைமுறையாக மாறின.
இந்த நிலையில், ஜூன் 2 அன்று நீருக்கடியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணி மூலம் அதன் சிதைந்த பாகங்கள் கண்டறியப்படும் வரை, பல தசாப்தங்களாக அந்த பான் ஆம் (Pan Am) விமானம் மூழ்கிய இடம் தெரியாமலே இருந்தது.

அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 2,000 அடி ஆழத்தில் அந்த விமானம் கண்டெடுக்கப்பட்டது. "PAA" என்ற எழுத்துக்கள் மற்றும் 'பான் அமெரிக்கன் வேர்ல்ட் ஏர்வேஸ்' நிறுவனத்தின் தனித்துவமான நீல நிற உலக உருண்டைச் சின்னம் உள்ளிட்ட கண்ணுக்குத் தெரியும் அடையாளங்கள் மூலம் ஆய்வாளர்கள் அந்த விமானத்தின் சிதைந்த பாகங்களை உறுதி செய்துள்ளனர்.
'பான் ஆம்' (Pan Am) விமானம் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு, விமானப் போக்குவரத்து வரலாற்றின் மிகப்பெரிய தீர்க்கப்படாத மர்மங்களில் ஒன்றான 'மலேசியா ஏர்லைன்ஸ்' விமானம் MH370 குறித்த கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.
கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் சென்றுகொண்டிருந்த அந்த 'போயிங் 777' விமானம், 2014-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் திகதி மாயமானது.
பல வருடங்களாக சர்வதேச அளவில் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த விமானம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |