கொரோனா தடுப்பூசி... பள்ளி மீது வழக்கு தொடுக்கும் 17 பிரித்தானிய பெற்றோர்கள்
முறைப்படி தங்களின் அனுமதி இல்லாமல் பிள்ளைகளுக்கு தடுப்பூசி அளிக்க முன்வர வேண்டாம் என பெற்றோர்கள் சிலர் பள்ளி ஒன்றிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மேலும், தங்களின் ஒப்புதலை பெறாமல் பிள்ளைகளுக்கு தடுப்பூசி அளிக்க நேர்ந்தால், பள்ளி மீது வழக்கு தொடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரித்தானியாவின் கார்ன்வால் பகுதியில் அமைந்துள்ள Tretherras பள்ளி நிர்வாகத்திடமே, 17 பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி தொடர்பில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
பிரித்தானியாவில் 12 முதல் 15 வயதுடைய சிறார்களுக்கு பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெற்றோர்களின் ஒப்புதலுடனே, மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் தடுப்பூசி அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், குழந்தையின் முடிவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், அவ்வாறு குழந்தை முடிவுக்கு எதிராக பெற்றோரின் முடிவு செல்லுபடியாகாது என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையிலேயே Tretherras பள்ளி நிர்வாகத்திடம் 17 பெற்றோர்கள் ஒன்றிணைந்து முக்கிய கடிதம் ஒன்றை அளித்துள்ளனர். கொரோனா தடுப்பூசி தொடர்பில் முழுமையான ஆய்வுகள் முடிவடையவில்லை எனவும், பக்கவிளைவுகள் தொடர்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை எனவும், இதனால் தங்கள் பிள்ளைகளுக்கு கொரோனா தடுப்பூசி அளிப்பதை ஒப்புக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி தொடர்புடைய பெற்றோர்கள் பள்ளிக்கு நேரிடையாக சென்றும் உறுதி செய்துள்ளனர். இருப்பினும், பள்ளி நிர்வாகம் தங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்து, பிள்ளைகளுக்கு தடுப்பூசி வழங்க முன்வந்தால், சட்ட சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
12 வயது பிள்ளைக்கு தரவுகளின் அடிப்படையில் முடிவெடுக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ள அந்த 17 பெற்றோர்களும், அவர்களிடம் இந்த விவகராம் தொடர்பில் பொறுப்பை ஒப்படைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பாலுறவுக்கான வயது 16 எனவும் புகைப்பிடிக்க வயது 18 எனவும் முடிவு செய்துள்ள அரசாங்கம், இன்னும் முழுமையான ஆய்வு முடிக்கப்படாத தடுப்பூசியை போட்டுக்கொள்ள 12 வயது சிறுவனை முடிவெடுக்க அனுமதிப்பதை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.