குழந்தைகளுக்கு இந்த சாக்லேட்டுகளைக் கொடுக்க வேண்டாம்... பயங்கர கிருமிகள் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை
பல நாடுகளில் குறிப்பிட்ட நிறுவனத் தயாரிப்புகளான சில சாக்லேட்டுகளில் சால்மோனெல்லா என்னும் ஒருவகை நோய்க்கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா, கனடா, ஜேர்மனி முதலான நாடுகளில் Kinder வகை சாக்லேட்டுகளில், சால்மோனெல்லா என்னும் கிருமி இருப்பது தெரியவந்துள்ளதால், அவ்வகை சாக்லேட்டுகளை உண்ணவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில், Kinder சாக்லேட்டுகளை உட்கொண்ட மூன்று வயது சிறுமி ஒருத்தி கடுமையாக பாதிக்கப்பட்ட செய்தி ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், நாளை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஈஸ்டர் பண்டிகையின்போது கிண்டர் முட்டை என்னும் ஒரு வகை சாக்லேட்டுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படும்.
ஆகவே, ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி, Kinder தயாரிப்பு சாக்லேட்டுகளை தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கவேண்டாம் என சுகாதார அலுவலர்கள் பெற்றோரை எச்சரித்துள்ளார்கள். காலாவதி திகதியை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்காமல், Kinder சாக்லேட்டுகள் அனைத்தையுமே திருப்பிக் கொடுக்குமாறு பிரித்தானியா மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
பிரித்தானியாவில் சால்மோனெல்லா கிருமியால் 70 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் ஐந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.