புதிய அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம்: பிரித்தானியா, பிரான்ஸையும் சேர்க்க ரஷ்யா கோரிக்கை
அமெரிக்காவுடனான எந்தவொரு புதிய அணுசக்திப் பேச்சுவார்த்தைகளிலும் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா போன்ற பிற அணு ஆயுத நாடுகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று ரஷ்யா கோரியுள்ளது.
பிரித்தானியாவும் பிரான்சும்
ரஷ்யா மற்றும் சீனாவுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்தே ரஷ்யா தற்போது இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

நேட்டோவில் அமெரிக்காவின் இராணுவக் கூட்டாளிகளாக இருக்கும் பிரித்தானியாவும் பிரான்சும் இதில் ஈடுபட்டால், ரஷ்யாவும் இத்தகைய ஒரு செயல்பாட்டில் ஈடுபடும். நேட்டோ தன்னை ஒரு அணுசக்தி கூட்டமைப்பாக அறிவித்துள்ளது என்றும் ரஷ்ய தூதர் கென்னடி கடிலோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய மற்றும் அமெரிக்காவின் மூலோபாய அணு ஆயுதப் பயன்பாடுகளுக்கு வரம்புகளை நிர்ணயித்த ஒப்பந்தம் வியாழக்கிழமை காலாவதியானதைத் தொடர்ந்து, அமெரிக்கா வெள்ளிக்கிழமை ஒரு புதிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஆனால், ஒரு புதிய ஒப்பந்தம் குறித்து விவாதிக்க அவகாசம் அளிக்கும் வகையில், இரு தரப்பினரும் தாமாக முன்வந்து ஒப்பந்தத்தின் காலக்கெடுவை ஒரு வருடத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று ரஷ்யா பரிந்துரைத்திருந்தது.

4,000 அணு ஆயுதங்கள்
இந்த நிலையில், காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்றும் புதிய ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ஆயுதக்கட்டுப்பாடு தொடர்பான சீனாவின் தூதர் ஷென் ஜியான் தெரிவிக்கையில், ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடன் நடைபெறும் புதிய பேச்சுவார்த்தைகளில் தங்களது நாடு பங்கேற்காது என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

முன்னதாக, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிடமும் தலா சுமார் 4,000 அணு ஆயுதங்கள் இருக்கும் நிலையில், தங்களிடம் அதன் ஒரு சிறு பகுதி மட்டுமே உள்ளது (சுமார் 600) என்று சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் ரஷ்யா விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் இதுவரை பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா தரப்பில் பதில் ஏதும் வெளியிடப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |