சீனாவில் பரவும் புதிய வகை தொற்று... முக்கிய நகரம் துண்டிப்பு; பள்ளிகள் மூடல்!
சீனாவில் திடீரென்று கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் புதிய வகையாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ள லான்சோ நகரம் எஞ்சிய பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், சுற்றலா தலங்களை உடனடியாக மூடவும் மாகாண அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நிலக்கரி இறக்குமதிக்காக மங்கோலியாவில் இருந்து வந்தவர்கள் மூலம் சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுதொடர்பான எந்த தகவலையும் சீனா அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை. கொரோனா பாதிப்புகள் குறைந்ததால் சற்றே இயல்புநிலைக்கு திரும்பிய சீன மக்கள், மீண்டும் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
லான்சோ நகரில் தொற்று அதிகமானோருக்கு பரவியதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொற்று பரவலை தடுக்க மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லான்சோ நகரில் இருந்து பிற மாகாணங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் கொரோனா பாதிப்பில்லை என்ற சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
லான்சோ நகருக்கு மற்ற நகரங்களில் இருந்து 60 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.