தைவான் தொடர்பில் சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் சபதம்
தைவான் நாட்டை அமைதியான முறையில் தாய்நாட்டுடன் ஒன்றிணைக்கும் வரலாற்று பணி நிறைவேற்றப்பட வேண்டும் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சபதம் எடுத்துள்ளார்.
சீனா மற்றும் தைவான் இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவும் நிலையில் இரு நாடுகளும் மீண்டும் ஒன்றிணைவதற்கான முயற்சியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தீவிரமாக களமிறங்கியிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பில் சிறப்பு நிகழ்வு ஒன்றில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேசுகையில், சீனா அமைதியான முறையில் தைவானுடன் ஒன்றிணைய விரும்புகிறது.
தைவான் சுதந்திர பிரிவினைவாதம் தாய்நாட்டுடன் மீண்டும் ஒன்றிணைப்பதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. சீனா தனது இறையாண்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்கும். தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்று பணி நிறைவேற்றப்பட வேண்டும், நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக , சீனா கனவு காண்கிறது. தலிபான்கள் வழியை பின்பற்ற நினைக்கிறது. ஆனால் நாங்கள் எங்களை பாதுகாத்து கொள்வோம் என்று தைவான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோசப் வூ தெரிவித்திருந்தார்.
தைவான் கடந்த சில மாதங்களாக சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. சீனாவில் கடந்த 1949ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தைவான் உருவானது.
இருப்பினும் தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசு கூறி வருகிறது. தேவையெனில் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சில மாதங்களுக்கு முன்னர் கூறி இருந்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
மட்டுமின்றி, சமீபத்திய ஆண்டுகளில் தைவானை சுற்றி தனது போர்ப் பயிற்சியையும் சீனா அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 18, 19 திகதிகளில் சீனாவின் சுமார் 40 போர் விமானங்கள் சீனா – தைவான் இடையிலான எல்லையை கடந்துள்ளன என்றும் அப்போது படை பலத்தைக் கொண்டு சீனா அச்சுறுத்துவதாக தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென் கூறியது குறிப்பிடத்தக்கது.