பல பகுதிகளில் பரிதாப நிலைதான்... மூடிமறைக்கும் அதிகாரிகள்: இறுகும் நெருக்கடி
சீனாவில் பல பகுதிகளில் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரித்து வருவதாக உள்ளூர் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.
மூடிமறைத்து வரும் அதிகாரிகள்
இருப்பினும் அதிகாரிகள் தரப்பு தற்போதும் உண்மையான தரவுகளை மூடிமறைத்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தலைநகர் பெய்ஜிங் மற்றும் பல மாகாணங்களில் பாதிப்பு எண்ணிக்கை சரிவடைந்து வருவதாக அரசு சார்பு நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
@reuters
ஆனால், 100 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஹெனான் மாகாணத்தில் பெரும்பாலான மக்கள் பாதிப்புக்கு இலக்காகியுள்ளதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு இல்லாத சமூகம் என்ற கடும்போக்கு விதியை மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் சீன நிர்வாகம் கடந்த டிசம்பர் தொடக்கத்தில் இருந்து ரத்து செய்த பின்னர், பாதிப்பு எண்ணிக்கையானது பலமடங்கு அதிகரித்துள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகள்
மட்டுமின்றி, கடந்த ஞாயிறு முதல் நாட்டின் அனைத்து எல்லைகளையும் சீனா திறந்துள்ளது. 2020 தொடக்கத்தில் இருந்தே சீனாவில் அடுத்தடுத்து ஊரடங்கு நடவடிக்கைகள், தொடர் கொரோனா பரிசோதனைகள் மட்டுமின்றி, மாகாணம் விட்டு வெளியே செல்லவும் கடுமையான கட்டுப்பாடுகள் என தீவிரமான விதிகளை அமுல்படுத்தியது.
@reuters
தற்போது மக்கள் போராட்டங்களுக்கு பின்னர் எந்த முன் ஏற்பாடுகளும் இல்லாமல் விதிகளை தளர்த்தியுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளதுடன், தகன இல்லங்கள் மற்றும் மருத்துவமனைகள் பல மாகாணங்களில் ஸ்தம்பித்துள்ளது.
இந்த ஆண்டு மட்டும் சீனாவில் குறைந்தது 1 மில்லியன் கொரோனா இறப்புகள் பதிவாகும் என நிபுணர்கள் தரப்பு கணித்துள்ளது.
இருப்பினும், தீவிர சிகிச்சையில் இருப்போர்கள் தொடர்பான எண்ணிக்கை இதுவரை அதிகாரிகள் தரப்பால் வெளியிடப்படவில்லை.