சாவின் விளிம்பில் 23 மில்லியன் மக்கள்... காப்பாற்றுங்கள்: மன்றாடும் முன்னாள் பிரித்தானிய பிரதமர்
ஆப்கானிஸ்தானில் பசி பட்டினியால் தவிக்கும் 23 மில்லியன் மக்களை காப்பாற்ற துரித நடவடிக்கை தேவை என உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் முன்னாள் பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுன்.
ஆப்கானிஸ்தானில் குளிர்காலம் வாட்டிவரும் நிலையில், 23 மில்லியன் மக்கள் பட்டினியாலும் பசியாலும் தவிப்பதாக குறிப்பிட்டுள்ள கோர்டன் பிரவுன், நாட்கள் அல்ல சில மணி நேரங்களே எஞ்சியுள்ளது என குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விற்று எஞ்சிய பிள்ளைகளின் பசி போக்கும் போது சிலர் தங்கள் இள வயது பெண் பிள்ளைகளை தலிபான்களிடம் ஒப்படைத்து பதிலுக்கு பணம் பெறும் கொடூரம் ஆப்கானிஸ்தானில் நடந்தேறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சிப்பொறுப்பை வலுக்கட்டாயமாக கைப்பற்றிய பின்னர், உலக நாடுகளின் வங்கிகள் ஆப்கானிஸ்தானின் நிதி ஆதாரங்களை முடக்கியது.
அமெரிக்காவில் செப்டம்பர் 11ம் திகதி தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கான மக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ள அந்த நிதியில் இருந்து பில்லியன் டொலர்கள் இழப்பீடு கேட்டு முறையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆப்கான் நாட்டின் சுகாதார ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்பவர்களை கருத்தில் கொண்டு முடக்கப்பட்டுள்ள நிதியை விடுவிக்க வேண்டும் எனவும், இதனால் ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தால் அவர்களுக்கு ஊதியம் வழங்க முடியும் எனவும் உலக நாடுகளின் அரசுகளை கோர்டன் பிரவுன் கேட்டுக்கொண்டுள்ளார்.